எல்லோரும் வந்திருந்தாங்க.. நிறைய பேசினோம்.. நரேந்திர மோடியே விளக்குகிறார் பாருங்க!
டெல்லி: ஒரே தேசம்.. ஒரே தேர்தல் என்கிற அடிப்படையில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவது தொடர்பாக ஆராய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒற்றை இந்தியாவை உருவாக்குவது, ஜனாதிபதி ஆட்சியை மாநிலங்களில் திணிப்பது, மாநில உரிமைகளை மதிப்பிழக்கச் செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது ஒரே தேசம் ஒரே தேர்தல். பாஜகவின் கொள்கை திட்டமான இதை தற்போது நடைமுறைப்படுத்த அக்கட்சி விரும்புகிறது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தொடர்பான விவரங்களை தமது இணையப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார். அதில் மோடி கூறியுள்ளதாவது:
நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்படுவது தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்தனர். அதேபோல் எம்.பிக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் வருத்தத்தைப் பதிவு செய்தனர்.
மேலும் தற்போதைய 17-வது லோக்சபாவில் முதல் முறையாக எம்.பி.யானவர்கள் அதிகம். சபைகளை மரபுடன் நடத்துவதற்கு அவர்கள் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் ஒரே தேசம், ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆதரவை தெரிவித்தனர். பல கட்சித் தலைவர்கள், இதை மிக கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனையடுத்து ஒரே தேசம், ஒரே தேர்தல் தொடர்பாக ஒரு கமிட்டி அமைப்பது என்பதும் அக்கமிட்டி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதே கூட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டு மற்றும் தேசத்தின் 2022-ல் தேசத்தின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதை தொடர்பாகவும் அனைத்து கட்சித் தலைவர்கள் கருத்துகளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்காரி, நரேந்திர சிங் தோமர், தாவார் சந்த் கெலாட், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.