விவசாய சட்டம்- தென்னிந்தியாவில் பிரச்சனை இல்லை என்ற அட்டர்னி ஜெனரலுக்கு எதிராக சீறிய திமுக வில்சன்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களால் தென்னிந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லை என தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததாக தலைமை நீதிபதி போப்டே கூறினார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்கில் இன்று 2-வது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது விவசாய சட்டங்கள் செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது; பிரச்சனைக்கான தீர்வுகளை அறிய குழு அமைப்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இன்றைய விசாரணையின் போது திமுக எம்பி திருச்சி சிவா சார்பில், ராஜ்யசபா எம்பி வில்சன் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். அவர், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் கருத்துகளை கேட்காமல் அவசரம் அவசரமாக விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என கூறினார்.
திமுக உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் இன்று உச்ச நீதி மன்றம் என்னுடைய வாதத்தை கேட்ட பின்பு மூன்று வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைத்து உத்திரவிட்டது . உச்ச நீதி மன்ற உத்திரவினால் திமுக மற்றும் இந்த நாட்டில் உள்ள அத்தனை விவசாயிகளுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.
— P. Wilson (பி. வில்சன்). “Believe in Yourself”. 🙏 (@PWilsonDMK) January 12, 2021
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி போப்டே, தென்னிந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லை; அமைதியாக இருக்கிறது என அட்டர்னி ஜெனரல் கூறியதாக சுட்டிக்காட்டினார். இதனை நிராகரித்த வில்சன், விஜயவாடா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன; இதற்கான புகைப்பட ஆதாரங்களை காட்ட முடியும் என்றார்.
டெல்லி போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள்- மத்திய அரசு புகார்- அறிக்கை கேட்கும் சுப்ரீம்கோர்ட்
மேலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான குழுவுக்கான வரையறைகளை உச்சநீதிமன்றம் உருவாக்க வேண்டும்; இந்த குழு தொடர்பாக போதுமான விளம்பரங்கள் தரப்பட வேண்டும் என்றும் வில்சன் வலியுறுத்தினார்.