'பதற்றம்..' உருமாறிய சிரோடைப் 2 டெங்கு.. தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: உருமாறிய சிரோடைப் டெங்கு 2 வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உட்பட 11 மாநிலங்கள் அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் நாட்டில் குறையவில்லை. அடுத்து வரும் பண்டிகை காலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!
அதேநேரம் மறுபுறம் உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் மர்ம காய்ச்சலும் வேகமாகப் பரவியது. சிறார்களைக் குறிவைத்துப் பரவிய இந்த மர்ம காய்ச்சலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பண்டிகை காலம்
இதற்கு மத்தியில், உருமாற்றம் அடைந்த டென் - 2 வைரசின் பரவல் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த டெங்கு - 2 வைரஸ், மிகத் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது. எனவே, அடுத்து வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
11 மாநிலங்கள்
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 11 மாநிலங்களில் டென் - 2 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு வைரஸ் - 2 பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நெருக்கடியான பகுதிகளில் மக்கள் கூட்டங்களைத் தவிர்த்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஷாப்பிங் மால்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்" என்றார்.
Recommended Video
ராஜேஷ் பூஷேன் அறிவுறுத்தல்
தொடக்கக் காலத்திலேயே, டெங்கு பாதிப்பை உடனடியாக கண்டறிய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷேன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் உதவி எண்களை வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், இருப்பில் உள்ள பாதிப்பு பரிசோதனை கருவிகளையும் தேவையான மருந்துகளின் கையிருப்பையும் போதியளவு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 வகையான டெங்கு
நான்கு வைரஸ்களால் டெங்கு பரவல் ஏற்படுகிறது. இந்த வைரஸ்கள் ஒன்றொன்றும் நெருக்கமான தொடர்புடையவை. டென் - 1, டென் 2, டென் 3, டென் 4 ஆகிய நான்கு வைரஸ்களும் ரத்தங்களில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை வெவ்வேறு விதமாக எதிர்கொள்கிறது. இரண்டாம் வகை டெங்கு வைரசால் தான் டெங்கு ரத்தக் கசிவு நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தென்கிழக்கு ஆசிய மரபணு வகையைச் சேர்ந்தது.
பள்ளி மாணவர்கள்
மனிதர்களைப் பொறுத்தவரைக் கொசுக்கள் கடிப்பதன் மூலமாகவே டெங்கு வைரஸ் ஏற்படுகிறது. கொரோனாவை கண்காணிக்கும் வகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பண்டிகை காலம் வர உள்ளதால் தேவையான நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்த மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக, பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குழந்தைகளிடம் ஏற்படும் வைரஸ் பரவலை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொசு பரவல்
புதிய வைரஸ் பரவல் குறித்துக் கண்காணிக்கவும் அவர்களின் தொடர்புகளை அடையாளம் காணவும் கொசுக்களின் இன உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் சிறப்புக் குழுக்களை அமைக்க மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் தீவிரமான நோயாளிகளுக்குத் தேவைப்படும் ரத்தங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் பாதிப்பு 5 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது. அதேபோல் 31 மாவட்டங்களில் பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது.