கொரோனா தடுப்பூசி... பரவும் போலி செயலிகள்... ஏமாறாமல் எச்சரிக்கும் மத்திய அரசு
டெல்லி: கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து இணையத்தில் பரவும் போலி செயலிகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு கடந்த வாரம் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கியது.
அதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோ - வின் செயலி
பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகளை மத்திய அரசு மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதற்காக கோ-வின் (COVID Vaccine Intelligence Network) என்ற செயலியை உருவாக்கும் பணிகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்தச் செயலி, இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளியிடப்படவில்லை.
பரவும் போலி செயலிகள்
மத்திய அரசு இந்த செயலியை வெளியிடவில்லை என்றாலும்கூட ப்ளே ஸ்டோரில் கோ-வின் என்ற பெயரில் பல போலி செயலிகள் உலா வருகின்றன. இந்நிலையில், இணையத்தில் பரவும் போலி செயலிகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ செயலி விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோ -வின் செயலி
இந்த கோ-வின் செயலி ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. முதலில் உள்ள நிர்வாகி பிரிவு தடுப்பூசி அளிப்பவர்களால் பயன்படுத்த முடியும். இதில் அவர்கள் தடுப்பூசி வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்க முடியும். இரண்டாவது பிரிவு பதிவு செய்யும் பிரிவு . இதைப் பயன்படுத்தி தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்பும் நபர்கள் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்தும் ஒரே செயலியில்
மூன்றாவதாகத் தடுப்பூசி பிரிவில் ஒருவருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டு விட்டதா இல்லையா என்ற தகவல்கள் கிடைக்கும். நான்காவது பிரிவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்தும் அது குறித்த கூடுதல் தகவல்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். ஐந்தாவதாக இருக்கும் பிரிவைப் பயன்படுத்தி தடுப்பூசியை எவ்வளவு பேர் எடுத்துக் கொண்டார்கள் உள்ளிட்ட தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப முடியும். இவ்வாறு அனைத்து பணிகளையும் மேற்கொள்ளக் கூடிய ஒரு செயலியாக கோ-வின் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதல்கட்ட திட்டம்
மத்திய அரசு முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கும், அதன் பின்னர் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசியை வழங்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, இது குறித்து தேவையான தரவுகளைத் திரட்டி கோ-வின் செயலியில் பதிவிட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.