சீனா ஊடுருவல்: நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு திட்டம்
டெல்லி: சீனாவின் ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ராணுவ குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளை நமது ராணுவ வீரர்கள் கடுமையாக போராடி முறியடித்து வருகின்றனர்.
சீனாவுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் எல்லையைத் தொடர்ந்து தற்போது அருணாச்சல பிரதேச எல்லையிலும் சீனா படை குவிப்பில் இறங்கியுள்ளது. இதனால் சீனாவுடனான எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
ஆபத்தான இடம்.. பாதுகாப்பின்றி வந்த இந்திய கப்பல்.. ஏவுகணையோடு வந்து உதவிய சீனா..நடுக்கடலில் டிவிஸ்ட்
விவாதிக்க கோரிக்கை
இதனிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் சீனா ஊடுருவல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் லோக்சபாவில் சீனா ஊடுருவல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நீண்ட விளக்கம் அளித்தார்.
லோக்சபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்
அதில், எல்லையில் சீனா 38,000 கி.மீ பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது; எல்லையில் சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டதை இந்திய வீரர்கள் முறியடித்தனர் என விவரித்திருந்தார் ராஜ்நாத்சிங். மேலும், சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தன்னிச்சையாக மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என எச்சரிக்கப்பட்டிருப்பதையும் ராஜ்நாத்சிங் சுட்டிக்காட்டினார்.
சீனாவுக்கு எச்சரிக்கை
அத்துடன், எல்லையில் சீனாவின் எந்த ஊடுருவலையும் எதிர்கொள்ள நமது ராணுவம் தயாராக இருகிறது. நாம் நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என்றும் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டார். ஆனால் விவாதம் நடத்தாமல் விளக்கம் மட்டும் தந்ததை ஏற்க முடியாது என கூறி காங்கிரஸ் எம்.பிக்கள் லோக்சபாவில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
கட்சி தலைவர்களுக்கு விளக்கம்?
இதனிடையே எல்லை பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத கட்சியின் தலைவர் ஒருவர் ஊடகங்களிடம் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.