புதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி
டெல்லி: சபாஹர்-ஜாகேதன் ரயில் திட்டத்திலிருந்து வெளியேறிவிட்டதாக ஈரானின் வாதத்தை இந்தியா மறுத்துள்ளது. மூத்த இந்திய அதிகாரிகள் இதுபற்றி கூறும் போது சபாஹர் துறைமுக திட்டத்தின் உள்ளார்ந்த பகுதியாக இருக்கும் ரயில்வேக்கு நிதியுதவி செய்வதற்கும் கட்டுவதற்கும் இந்தியா உறுதியுடன் இருக்கிறது என்றார்கள்.
சபாஹாரில் இருந்து துர்க்மென் எல்லைக்கு செல்லும் போக்குவரத்து பாதையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்ற ஈரானிய எதிர்பார்ப்புக்கு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரிகள் பதில் அளித்தனர்.
இதுபற்றி இந்திய அதிகாரிகள் கூறுகையில் "சபாஹர்-ஜாகேதன் ரயில் பாதையை கட்டுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதற்காக ஈரானியர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறோம். இந்த முக்கியமான திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள்" என்றார்கள்.
தலைவராக ராகுல் இல்லை... எனக்கு நெருக்கடியும் அதிகரித்தது... மனம் திறந்த சச்சின் பைலட்!!
ஈரான் குற்றச்சாட்டு
இந்த விவகாரத்தில் ஈரானிய அரசாங்க வட்டாரத்தில் ஒரு அதிகாரி கூறும் போது, "சபாஹர் துறைமுகத்தில் முதலீடு செய்யப்படுவதோடு, சபாஹாரில் இருந்து ஜாகேதனுக்கும், ஜாகேடான் முதல் சரக் வரையிலான இந்த யுக்தி சார்ந்த போக்குவரத்து பாதையை நிதியளிப்பதில் மற்றும் நிர்மாணிப்பதில் இந்தியாவும் மிக முக்கியமான பங்கை வகிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. துர்க்மெனிஸ்தானின் எல்லையில், திட்டத்தை நிறைவேற்ற இந்தியா போதிய நிதி அளித்து ஆர்வம் காட்டவில்லை. எனவே தற்போது ஈரானிய நிதி மற்றும் பொறியியல் திறன்களால் கட்டுமானத்தில் உள்ளது " என்றார்
கட்டுமானங்கள் தயார்
ரயில் பாதைகளுக்கு பொருள் தயாரிப்பதில் சில தடைகள் தீர்த்து வைக்கப்பட்டு வருவதாகவும், ஈரானிய ஏஜென்சிகள் மேற்கொள்ளத் தேவையான கட்டுமானங்களும் காத்திருப்பதாகவும் ஈரானிய அரசு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. இந்நிலையில் சபாஹர்-ஜாகேதன் ரயில் திட்டத்திலிருந்து வெளியேறிவிட்டதாக ஈரானின் வாதத்தை இந்தியா மறுத்துள்ளது. சபாஹர் துறைமுக திட்டத்தின் உள்ளார்ந்த பகுதியாக இருக்கும் ரயில்வேக்கு நிதியுதவி செய்வதற்கும் கட்டுவதற்கும் இந்தியா உறுதியுடன் இருக்கிறது என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா அனுமதி
தற்போது இந்தியா செய்து வரும் பணிகளுக்கு அமெரிக்கத் தடைகளின் கீழ் இருக்கும் எஃகு தேவைப்படுகிறது, இதுதான் தாமதத்தை ஏற்படுத்தி வந்தது. எனினும் தற்போது துறைமுகப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா அமெரிக்காவிடம் பேசி பெரும் முயற்சி எடுத்ததால் தடைகள் நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் ஈரானிய பிரதமர் ஹசன் ரூஹானியை சந்தித்தார், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பரில் தெஹ்ரானுக்கு பயணம் செய்து பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
பகைக்க விரும்பவில்லை
இந்நிலையில் சபாஹர் துறைமுகத்தைப் பொருத்தவரை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்காக துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஈரான் தொடர்ந்து இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில உறுதியாக உள்ளதாக ஈரான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலையில் சீனா ஈரானில் முதலீடு செய்யப்போகும் நிலையில் இந்தியாவையும் பகைக்காமல் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஈரான் விரும்புவதாக தெரிகிறது.