சுற்றி நிற்கும் இடியாப்பச் சிக்கல்கள்.. அடுத்து யார் பிரதமராக வந்தாலும் சரி.. கஷ்டம்தான்!
மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இந்தியா சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
டெல்லி: அரசியல் சூழல் போய்க் கொண்டிருக்கும் திசைகளைப் பார்த்தால் அடுத்து யார் பிரதமராக வந்தாலும் சரி கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும் என்றே தெரிகிறது. கிட்டத்தட்ட மீண்டும் கூட்டணி அரசுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
கூட்டணி அரசு என்று வந்து விட்டாலே அங்கு குழப்பங்களுக்குப் பஞ்சமே இருக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசு அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகளால் பிரச்சினை இல்லாமல் ஆட்சி நடத்தியதை மறுக்க முடியாது.
காரணம், இந்தியாவில் அதற்கு முன்பு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் நாம் கண்ட குழப்பங்களை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. ஆனால் தற்போது மீண்டும் அந்த "கற்காலம்" திரும்பப் போகிறதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
விடுங்க விடுங்க.. சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன் அசால்ட்!
பாஜக தயவு
நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றே தெரிகிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக இடம் கிடைக்கலாம் என்ற கருத்துக் கணிப்புகள் பரவலாக உள்ளன. அதேசமயம், கூட்டணிக் கட்சிகளின் தயவுடன்தான் பாஜகவால் ஆட்சியமைக்க முடியும் நிலைமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா
பாஜகவுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் வாஜ்பாய் காலத்து கூட்டணி ஆட்சி போல இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. காரணம் வாஜ்பாய், படு லாவகமாக தனது கூட்டணி அரசை நடத்தினார். கூட்டணிக் கட்சிகளும் அதற்கேற்ப அவருடன் ஒத்துழைப்பு கொடுத்தே நடந்து கொண்டன. அப்படியும் முதல் வாஜ்பாய் ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். திமுக துணையுடன்தான் 2வது ஆட்சியை வாஜ்பாய் சிறப்பாக நடத்த முடிந்தது.
கோரிக்கைகள்
பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்தால் பிரதமராக மோடி வருவார் என்று கூற முடியாது. வேறு ஒருவரை பாஜக நியமிக்க வேண்டியிருக்கும். காரணம், மோடியை முன் வைத்தால் யாரும் ஆதரவு தர முன்வர மாட்டார்கள் என்ற நிலை இருப்பதால். மேலும் கூட்டணிக்கு கையில் கிடைக்கும் கட்சிகளை எல்லாம் சேர்க்க வேண்டியிருக்கும். எனவே ஆட்சி நீடிக்க அவர்கள் வைக்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு வரும்.
கலவை கூட்டணி
மறுபக்கம் காங்கிரஸ். காங்கிரஸ் ஒருவேளை ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால், அதன் கூட்டணியில் பலவிதமான கலவையான கூட்டணிக் கட்சிகள் இடம் பெற்றிருக்கும். அவர்களை சமாளிப்பது மிகப் பெரிய சிரமமான வேலையாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதை நாடறியும்.
பிரச்சனைகள்
இது ஒரு பக்கம் இருந்தால், மறுபக்கம் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமே பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. பிரச்சினைகளின் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது.. இங்குதான் வரலாறு காணாத பல முக்கியப் பிரச்சினைகள் பற்றி எரிந்து கொண்டுள்ளன. இதையெல்லாம் சமாளித்தாக வேண்டிய நிலை அடுத்த அரசுக்கு உள்ளது.
யார் பிரதமர்?
ஆக, வரப் போகிற புதிய அரசுக்குதலைமை தாங்கப் போவது யாராக இருந்தாலும், அதாவது யார் பிரதமராக வந்தாலும் அவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.