பாஜகவை வீழ்த்த ராகுலை சந்தித்த கையோடு மாயாவதியையும் அகிலேஷையும் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!
டெல்லி: பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு நடத்திய கையோடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
வரும் 23-ஆம் தேதி நாட்டை ஆள போவது யார் என்பது குறித்த முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இதனால் எப்படியும் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன. இதில் மும்முரமாக இருப்பவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இவர் நேற்றைய தினம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார் நாயுடு. கேஜரிவால், சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசிய நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்தார்.
அமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.? மம்தாவுக்கு சிவசேனா பதிலடி
கடந்த லோக்சபா தேர்தலில் ராகுலுக்கு எதிராக பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து தற்போது ராகுலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.