ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து.. ஜனாதிபதியிடம் மனு அளித்தார் சந்திரபாபு நாயுடு
டெல்லியில் குடியரசு தலைவரை இன்று நேரில் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு
Recommended Video
டெல்லி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிஅம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதன் உச்சக்கட்டமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து, அவர் பாஜகவுடனான கூட்டணியில் இருந்தே விலகினார். இந்த விவகாரத்தில் இருந்துதான் பாஜகவுடன் குறிப்பாக மோடியை பகிரங்க விமர்சனம் செய்ததுடன், பாஜகவுக்கு எதிரான பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.
நேரில் ஆதரவு
அதன்படி நேற்றுகூட, டெல்லியில் அவரது தலைமையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு போனார்கள்.
எதிர்வினைகள்
அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்துக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதியை எதிர்ப்பதாகவும், இந்த அநீதி தேசிய ஒருமைப்பாட்டில் எதிர்வினைகளை கண்டிப்பாக உருவாக்கும் என்று 5 கோடி ஆந்திரமக்கள் சார்பில் எச்சரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சிறப்பு அந்தஸ்து
பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்தை இன்றைய தினம் சந்தித்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை நேரில் முறையிட்டு அது சம்பந்தமான மனுவையும் அளிக்க போவதாகவும் நாயுடு அறிவித்திருந்தார்.
மனு அளித்தனர்
அதன்படி, குடியரசு தலைவரை சந்திப்பதற்கான பேரணி இன்று காலை சந்திரபாபு நாயுடு தலைமையில் தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சந்திரபாபு நாயுடுவுடன் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எம்பிக்களும் உடன் சென்றனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.