எலியும் பூனையுமாக இருந்த ராவும், நாயுடுவும்.. பாஜக அரசை வீழ்த்த கேசிஆருக்கு அழைப்பு!
Recommended Video
டெல்லி: பாஜக அரசை வீழ்த்துவதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக மே 23-ஆம் தேதியை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் இந்த நாடே உற்று நோக்கி வருகிறது. இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் விடாபிடியாக உள்ளன.
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதற்காக தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மூன்றாவது அணிக்கு வித்திட்டு வந்தார். இதற்காக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்.
பாஜகவை வீழ்த்த ராகுலுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு.. மாயாவதியையும் சந்திக்கவும் திட்டம்!
3-ஆவது அணி
எனினும் பேச்சு பேச்சாகத்தான் இருந்ததே ஒழிய செயலில் ஒன்றும் தெரியவில்லை. சந்திரசேகர ராவ் யாருடனெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினாரோ அவர்கள் எல்லாம் 3-ஆவது அணிக்கு வாய்ப்பில்லை என்றே கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி
எனினும் 3ஆவது அணிக்கான முயற்சியை ராவ் கைவிடவில்லை. ஆனால் சற்று இறங்கிவந்துள்ளார். அதாவது முதலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத அரசு அமைய என கூறியிருந்த அவர் 3-ஆவது அணி அமையும் போது ஆட்சி அமைக்க பெரும்பான்மையில்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் கோரப்படும் என டிஆர்எஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
டிஆர்எஸ்
ஆயினும் தலைமை பொறுப்பை காங்கிரஸுக்கு கொடுக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளது ராவின் டிஆர்எஸ் கட்சி. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எந்தக் கட்சியையும் தங்களது அணிக்கு வரவேற்பதாக கூறியுள்ளார்.
மனநோயாளி
நாயுடுவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த போதிலிருந்து இருவருக்குள்ளும் கருத்து மோதல் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. சந்திரபாபுவை சந்திரசேகர ராவ் மனநோயாளி என்றும் பதிலுக்கு நாயுடு கேசிஆரை கடுமையாகவும் விமர்சனம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த 3-ஆவது அணி ஒன்று வந்து அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் உறுதியாக உள்ளதையே அவரது அழைப்பு வெளிப்படுத்துகிறது.