மாயாவதி, அகிலேஷ் ஓகே சொல்லியாச்சு.. ராகுலை மீண்டும் சந்தித்த சந்திரபாபு.. இன்றே முக்கிய முடிவு?
முக்கிய கோரிக்கை ஒன்றை முன்னிறுத்தி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
Recommended Video
டெல்லி: முக்கிய கோரிக்கை ஒன்றை முன்னிறுத்தி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று காங்கிரஸ் ராகுல் காந்தியை ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்தார்.
லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஐடியாவை முன்மொழிந்தவர் ஆந்திர பிரதேச சந்திரபாபு நாயுடுதான். 21 எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இவர் திட்டமிட்டார்.
ஆனால் அவர் நினைத்தது போல பல மாநிலங்களில் தேர்தல் கூட்டணிகள் அமையவில்லை. ஆனால் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்க அவர் தீவிரமாக இருக்கிறார்.
நேற்று சந்தித்தார்
இந்த நிலையில்தான் நேற்று ஒரே நாளில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவை ஒன்றாக சந்தித்தார் சந்திரபாபு நாயுடு. இவர்கள் சுமார் 1 மணி நேரம் உரையாடினார்கள். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இவர்கள் பேசினார்கள். நேற்று காலை சந்திப்பிற்கு அனுமதி கேட்ட சந்திரபாபு மதியமே இருவரையும் சந்தித்தார்.
ஒப்புதல்
இந்த சந்திப்பு சுமுகமாக முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாயாவதியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கேட்டதாக தெரிகிறது. மாயாவதியும் தனக்கு இருக்கும் பிரதமர் ஆசையை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ராகுலிடம் சந்திரபாபு நாயுடு பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார் மாயாவதி.
என்ன சொன்னார்
அதே சமயம் வேறு சூழ்நிலையே இல்லை என்றால் கண்டிப்பாக ராகுலை பிரதமராக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சந்திரபாபு கேட்டதாக தெரிகிறது. இதற்கும் மாயாவதி அகிலேஷ் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. வேறு வழியே இல்லாதபட்சத்தில் ராகுலை பிரதமராக ஏற்க தயார் என்று மாயாவதி கூறியுள்ளார். நேற்று இந்த சந்திப்பு சுமுகமாக முடிந்துள்ளது.
மீண்டும் சந்திப்பு
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தியை ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்தார். நேற்று நடந்த மாயாவதி, அகிலேஷ் யாதவ் உடனான சந்திப்பு குறித்து ராகுலுடன் ஆலோசிப்பதற்காக சந்திரபாபு இந்த சந்திப்பை நடத்தினார். மாயாவதியின் பிரதமர் கனவு குறித்து இவர் ராகுலிடம் எடுத்துரைப்பார் என்கிறார்கள்.
இன்றே முக்கிய முடிவு
இந்த நிலையில் இன்றே இந்த சந்திப்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். சந்திரபாபு நாயுடு நாளை காலையில் இருந்து வரிசையாக 21 கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். ராகுலிடம் இப்போது பேசுவதை வைத்தே இந்த சந்திப்புகள் அமையும் என்கிறார்கள்.