தேவகவுடா, குமாரசாமியை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு.. பெரிய கூட்டணியில் இணையும் புதிய தலைகள்!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திருப்பமாக இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்க இருக்கிறார்.
டெல்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திருப்பமாக இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்க இருக்கிறார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொடர் முயற்சி காரணமாக 2019ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் மிகப்பெரிய கூட்டணி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
கடந்த வாரம் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் என்று பல கட்சிகளை சென்று பார்த்தார்.
இது இந்திய அரசியலில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்பட்டது. அரசியல் கட்சிகள் இடையே பெரிய விவாதத்தை கிளப்பியது.
பாஜகவிற்கு எதிரான காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, இரண்டு இடதுசாரி கட்சிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, முஸ்லீம் லீக், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஒன்றை உருவாக்க தெலுங்கு தேசம் கட்சி முயன்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திருப்பமாக இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்க இருக்கிறார். இன்னும் சில மணி நேரத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.
அதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்டி தேவகவுடாவையும் சந்திக்க இருக்கிறார். இவர்கள் தேசிய அளவிலான கூட்டணி குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.
இந்த கூட்டணி இப்போதே பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.