அடிச்சிகிட்டாங்க.. இப்போ ஒன்னாயிட்டாங்க.. மமதா-ராகுல் காந்தி திடீர் வெள்ளைக்கொடி.. பின்னணி இதுதான்
Recommended Video
டெல்லி: மூன்றாவது அணி அமைக்க முயலும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியாகட்டும், அல்லது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியாகட்டும், தேர்தல் பிரச்சாரத்தில், ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பேசுவது வெகுவாக குறைந்துவிட்டது.
7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் எஞ்சியிருப்பது இரு கட்ட தேர்தல்கள்தான். எனவே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் குறித்து இப்போதே வியூகங்கள் வகுக்கப்பட ஆரம்பித்துள்ளன. இதில் முன்னிலையில் இருப்பவர் சந்திரசேகர ராவ்.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கூட்டணிகளுக்குமே ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்காவிட்டால், மூன்றாவது அணி மூலமாக ஆட்சியை நிர்மானிக்க வேண்டும் என்று கருதுகிறார் சந்திரசேகரராவ்.
ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனை, சந்திரசேகர ராவ், சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமியை அடுத்ததாக, சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்திக்க நேரம் கேட்டபோதிலும், ஸ்டாலின் நேரம் ஒதுக்கவில்லை என தெரிகிறது. வட கிழக்கு மாநிலங்களிலும், சந்திரசேகர ராவ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3வது அணி அமைக்க ஆதரவு கேட்க உள்ளார் என தெரிகிறது.
மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியாவது லேட் ஆகும் சரி.. எவ்வளவு நேரம் ஆகும்? தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற, தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது, மமதா பானர்ஜியை அதிகம் விமர்சித்து பேசவில்லை. 20 முறை மோடியை விமர்சனம் செய்தால், 2 முறை மட்டுமே, ராகுல் காந்தி, மமதா பானர்ஜியை விமர்சனம் செய்தார்.
ஆனால், மார்ச் 23ம் தேதி, மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மமதாவை கடுமையாக சாடியிருந்தார். வேலைவாய்ப்புகளை மமதா அரசு உருவாக்கவில்லை என்றும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வன்முறையில் ஈடுபடுவதாகவும், கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தார். மோடிக்கு ஈடாக மமதாவும், ராகுல் தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால், இப்போது எல்லாம் மாறியாச்சு.
நேற்று ராகுல் காந்தி புருலியா பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, சற்று தொலைவிலுள்ள பகுதியில்தான் மமதாவும் நேற்று பிரச்சாரம் செய்ய நேர்ந்தது. ஆனால், அவரும் கூட ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்யவில்லை. அவ்வளவு ஏன், காங்கிரசை கூட மயிலிறகால் தடவுவதுபோலத்தான் விமர்சனம் செய்தார். பழைய ஆக்ரோஷம் அவரிடம் இல்லை. ஆனால், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரைத்தான் வறுத்து எடுத்துவிட்டார்.
சந்திரசேகர ராவ் எடுத்து வரும் 3வது அணி உருவாக்கத்திற்கான முயற்சிகள், அதிலும் குறிப்பாக இடதுசாரிகளை, 3வது அணியில் இணைக்க அவர் எடுத்துள்ள முயற்சிகள், மேற்கு வங்க தேர்தல் களத்தில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன என்பதைத்தான், மமதா மற்றும், ராகுல் காந்தி ஆகிய இருவரின் தேர்தல் பிரச்சார தொனி காண்பிக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலாவை, இவ்விரு தலைவர்களும் கையில் எடுத்துவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.