நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிய சந்திரயான் 2.. வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இனி நடக்க போகும் அதிசயங்கள்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும்.
இந்தியா கடைசியில் அந்த வரலாற்று சாதனையை படைத்துவிட்டது. யாரும் இதுவரை நினைத்து கூட பார்க்காத நிலவின் தென் துருவத்தை இந்தியா இன்னும் சில நாட்களில் தொட போகிறது. சந்திரயான் 1 வெற்றியை தொடர்ந்து சரியாக பத்து வருடங்கள் கழித்து தற்போது சந்திரயான் 2 வெற்றி பெற்றுள்ளது.
கடந்த வாரம் திங்கள் கிழமை அதிகாலை செலுத்தப்பட வேண்டிய சந்திரயான் 2 விண்கலம், இன்று மதியம் 2.45 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நோக்கி சந்திரயான் 2 நகர்ந்து செல்லும்.
சந்திரயான் 2 எப்படி
சந்திரயான் 2 மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டையும் சேர்த்து 960 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2 வருடங்களில் மிக கடுமையான உழைப்பை போட்டு சந்திரயான் 2வை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சந்திரயான் 2 விண்கலம் பல்வேறு விஷயங்கள் நிறைய சிறப்பம்சங்களை கொண்டு இருக்கிறது.
மூன்று விஷயங்கள்
இந்தியாதான் முதல்முறையாக நிலவின் தென் துருவ பகுதிக்கு ஆய்வு கலம் ஒன்றை அனுப்புகிறது. சந்திராயன் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. அதன்படி ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று.
எப்போது ஏவப்பட்டது
சந்திரயான் 2 சரியாக இன்று மதியம் 2.45 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2வை கிரயோசனிக் எஞ்சின் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் கொண்டு சென்றது. இதில் இருக்கும் கிரயோசனிக் எஞ்சின் முன்பு இருந்ததை விட 15% அதிக பவரில் செயல்பட்டு சந்திரயானை சுமந்து சென்றது.
எப்படி எல்லாம் செல்லும்
இந்த ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதை முடியும் வரை மட்டுமே சந்திரயான் 2வை கொண்டு செல்லும். அதன்பின் சந்திரயான் 2 தானாக இயங்க தொடங்கும். சரியாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 2 ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் வட்டப்பாதையில் சுற்றும். அதன்படி சந்திரயான் 2 ஏற்கனவே புவி வட்டப்பாதையை அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் செல்லும்
சந்திரயான் 1 சென்றது போல இது இயற்கையின் இயற்பியல் விதிகளை வைத்து பூமியை சுற்றி சுற்றி சென்று பின் நிலவையை அடையும். பூமியின் வட்டப்பாதையை தாண்டியவுடன் (48000 கிமீ) சந்திரயான் 2 உடனடியாக எஞ்சின் மூலம் வேகமாக செயல்பட்டு நிலவை நோக்கி நகர தொடங்கும். அதற்கு முன் பூமியை சந்திரயான் 2 சுற்றி வரும்.
எப்படி சுற்றும்
முதலில் மிக குறைவான புவி வட்டப்பாதையான் 170 கிமீ சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும். அதன்பின் அங்கிருந்து நீள் வட்டப்பாதையில் சந்திரயான் 2 சுற்றும். நீள்வட்ட பாதையில் சுற்றி இயற்பியல் விதியின்படி 45000 கிமீ தூரத்தை சந்திரயான் 2 அடையும். அந்த பகுதியை அடைந்த அடுத்த நொடி நிலவை நோக்கி சந்திரயான் 2 இயங்க தொடங்கும். இதன் மூலம் எரிபொருள் குறைவாக பயன்படுத்தப்படும்.
அடுத்து என்ன
நிலவை நோக்கி சந்திரயான் 2 நகர தொடங்கிய பின் பின்வரும் விஷயங்கள் நடக்கும்.
1. சந்திரயான் 2ல் இருக்கும் எஞ்சின்கள் செயல்பட தொடங்கியதும், அதில் இருந்து வரும் உந்து சக்தி மூலம் நிலவை நோக்கி சந்திரயான் 2 நகரும்.
2. நிலவு பூமியை சுற்ற கூடியது. இதனால் நிலவிற்கு ஏற்றபடி சந்திரயான் 2 அடிக்கடி திசையை மாற்ற வேண்டி இருக்கும். இதனால் நிலவு நகரும் இடத்தை நோக்கி சந்திரயான் 2 கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறி மாறி செல்லும்.
3. நிலவை நோக்கி 48 நாட்கள் நெடும் பயணத்தை சந்திரயான் 2 செய்ய இருக்கிறது.
4. செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும்.
5. சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும். இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில திரஸ்டர் எஞ்சின்கள் இருக்கும். இது எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை குறைக்கும். இதனால் விபத்து தவிர்க்கப்படும்.
6. சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டார் எனப்படும் ஆராய்ச்சி செயற்கைகோள் நேரடியாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
7. விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கும். இது பாராசூட் மற்றும் எதிர் எஞ்சின்கள் மூலம் வேகம் குறைக்கப்படும்.
8. செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆராய்ச்சிகளை செய்யும்.
9. இரண்டும் 14 நாட்கள் ஆராய்ச்சி செய்யும். ஆர்பிட்டார் சேட்டிலைட் மட்டும் 1 வருடம் ஆராய்ச்சி செய்யும்.
என்ன கண்காணிப்பு
இன்று இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 45 நாட்களுக்கு மிக கவனமாக இதை இஸ்ரோ கண்காணிக்க வேண்டும். சரியாக செப்டம்பர் 7ம் தேதி நிலவில் இந்தியாவின் ரோவர் பிரக்யான் கால் வைத்து சாதனை படைக்கும் வரை திக் தி நிமிடங்கள் தொடரும்!