சந்திராயன் 2 நிறுத்தப்பட்ட விவகாரம்.. இஸ்ரோவின் முடிவு மிகச்சரி.. டிஆர்டிஓ முன்னாள் இயக்குநர்
Recommended Video
டெல்லி: சந்திராயன் 2 விண்கலத்தை ஏவாமல் நிறுத்தி வைத்த இஸ்ரோவின் முடிவு சரியானதே என, டிஆர்டிஓ முன்னாள் இயக்குநரான ரவி குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
நாடே ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த சந்திராயன் 2 விண்கலம் ஏவுவது, கடைசி நேரத்தில் திடீரனெ நிறுத்தப்பட்டது. நிலவின் தென்துருவத்தை விண்கலம் மூலம் இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி செய்ததில்லை.
இந்நிலையில் நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை இறக்கி, வரலாற்று சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது இஸ்ரோ. சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதற்காக நேற்று காலை 20 மணி நேர கவுண்டவுன் துவங்கியது.
சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2 விண்கலம். நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய ஆர்பிட்டர் என்ற கருவியும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய லேண்டர் என்ற கருவியும், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆராய ரோவர் என்ற கருவியும் சந்திராயன் 2 விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம்.
திடீரென நிறுத்தப்பட்ட சந்திராயன் 2.. இஸ்ரோ விஞ்ஞானிகள் நிச்சயம் சாதிப்பர்.. மக்கள் கருத்து
மேற்கண்ட மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரையோஜெனிக் நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் 2 விண்கலத்தை ஏவ சரியாக 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும் போது, கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் சந்திராயன் 2 ஏவுவது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தது இஸ்ரோ.
இஸ்ரோவின் திடீர் அறிவிப்பால் சந்திராயன் 2 விண்ணில் பாய்வதை நேரில் காண வந்த 5,000 பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கடைசி நேரத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை ஏவாமல் நிறுத்தி வைத்தது சரியான முடிவு தான் என டிஆர்டிஓ முன்னாள் இயக்குநர் ரவி குப்தா தெரிவித்துள்ளார்.
ஏனெனில் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவிய பின்னர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தால், அதனை விஞ்ஞானிகள் சரி செய்வதென்பது மிகவும் சவாலான பணி. எனவே பிரச்சனையை கண்டறிந்த துவக்கத்திலேயே, இஸ்ரோ சரியான முடிவை தான் எடுத்துள்ளது என இந்திய பாதுகாப்பு துறையின் உற்பத்தி பிரிவின் முன்னாள் இயக்குநர் ரவி குப்தா கூறியுள்ளார்.
விணகலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல சுற்று சோதனைகள் செய்யப்படுகின்றன.ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு நொடியிலும் கண்காணிப்பது மிகவும் அவசியமானதாகிறது என்றும் ரவி குப்தா கூறினார்.