வீட்டு சாப்பாடு கிடையாது.. சிறை உணவுதான்.. ப.சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், வீட்டு சாப்பாட்டையும் அனுமதிக்க மறுத்துவிட்டது. சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அது தான் சிதம்பரத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டுநிதியை பெற முறைகேடாக அனுமதி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். சிபிஐ நீதிமன்ற உத்தரவுப்படி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்ட டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி சுரேஷ் கெய்ட் முன் நேற்று நடந்தது. அப்போது கபில் சிபலிடம் நீதிபதி சுரேஷ் கெய்ட் கீழமை நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக இங்கு வந்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
ஜாமீன் வழங்க கோரிக்கை
இதற்கு பதில் அளித்த கபில் சிபல், சட்டத்தை மதிக்கும் நல்ல குடிமகனாக சிதம்பரம் இருக்கிறார். விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டார், எனவே ஜாமீன் வழங்க வேண்டும் . சிபிஐ அழைக்கும் நேரத்தில் நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவார் என்றார்.
சிபிஐ எதிர்ப்பு
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், தனது பதவியைப் பயன்படுத்தி ப.சிதம்பரம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு உதவியுள்ளது விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும், இதற்குக் கைமாறாக பல கோடி ரூபாய்களையும் அவர் பெற்றுள்ளார் என்றும் கூறியதுடன் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
மனு வாபஸ்
இதையடுத்து நீதிபதி, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு தனித்தனி மனுக்களை ப.சிதம்பரம் தாக்கல் செய்திருப்பதற்கும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, திகார் சிறையில் அடைத்ததற்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்றார்.
அனுமதி மறுப்பு
இதையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனுதாரர் தனது குடும்பத்தினரை நாள்தோறும் சந்திக்க விரும்புகிறார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவை மனுதாரருக்கு வழங்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிபதி சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அது தான் சிதம்பரத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
நீதிமன்றம் அனுமதி மறுப்பு
இதற்கு பதிலளித்த கபில் சிபல், நீதிபதி அவர்களே, சிதம்பரத்திற்கு 74 வயது ஆகிறது எனத் தெரிவித்தார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சவுதலாவும் வயதானவர்தான். அவரும் அரசியல் சிறை கைதி தான். எவரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்றார். எனினும் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.