அவசர வழக்காக உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது?
டெல்லி: தமக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்காததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்கிற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் இன்று தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசம் தர வலியுறுத்தப்பட்டது. ஆனால் நீதிபதி சுனில் கவுர் இதனையும் நிராகரித்தார்.
இதனால் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக ப. சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார். அத்துடன் உச்சநீதிமன்ற பதிவாளரை நேரில் சந்தித்த சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அவசர வழக்காக உடனே விசாரிக்க வலியுறுத்தினர்.
ஆனால் இதை ஏற்க பதிவாளர் மறுத்துவிட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் நாளை அவசர வழக்காக விசாரிக்க முறையிடுவோம் என கூறினார் கபில்சிபல்.
தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றத்திலும் பின்னடைவை சந்தித்துள்ளதால் ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவுகிறது.