காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் ஆண்டில் போராடும் உரிமையை பறித்தது அவமானம்.. ப சிதம்பரம் பாய்ச்சல்
டெல்லி: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் ஆண்டில் அமைதியாக பேரணி நடத்துவது போராட்டம் நடத்துவது உள்ளிட்ட உரிமைகளை பறித்ததைவிட வேறு அவமானம் எதுவும் இருக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குடியுரிமை திருத்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதலில் அஸ்ஸாமில் தொடங்கிய போராட்டம் தற்போது தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை வரை நீண்டுவிட்டது. அதிலும் பெங்களூருவில் மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
எதிர்ப்பு
மேலும் பெங்களூரில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹாவை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
|
மகாத்மா காந்தி
இந்த நிலையில் நாடு முழுவதும் ஒடுக்கப்படும் போராட்டம் குறித்து ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை கொண்டாடினோம்.
|
அவமானம்
இத்தகைய உன்னத ஆண்டில் அமைதி பேரணி நடத்துவது, போராட்டம் நடத்துவது போன்ற உரிமைகள் நாட்டு மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டன. இதைவிட வேறு அவமானம் எதுவும் இருக்க முடியாது.
|
பெருமை
பெங்களூருவில் ராமசந்திர குஹாவை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் மதசார்ப்பின்மை, பன்முகத்தன்மை, தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றை நிலைநிறுத்தி ஜாதி, மத பேதமின்றி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்றார் ப சிதம்பரம்.