ஐஎன்எக்ஸ் வழக்கு- ப.சிதம்பரத்துக்கு மீண்டும் அமலாக்கத்துறை காவல் இல்லை- வீட்டு சாப்பாட்டுக்கு அனுமதி
Recommended Video
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மீண்டும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ப. சிதம்பரத்தை நவம்பர் 13 வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 21-ந் தேதியன்று ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அண்மையில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுங்கள்.. ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் கோரிக்கை
திகார் சிறையில் கைது
அதற்கு முன்னதாக திகார் சிறையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறையால் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து சிதம்பரத்தை விசாரித்தனர்.
சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு
இதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தும் சிதம்பரத்தால் சிறையில் இருந்து வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் ப.சிதம்பரத்தின் அமலாக்கப்பிரிவு காவல் இன்றுவரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இன்று கோர்ட்டில் ஆஜர்
மொத்தம் 14 நாட்கள் ப.சிதம்பரத்தை அம்மலாக்கப் பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் . இன்று சிதம்பரத்தின் காவல் முடிவடைந்ததால் அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமலாக்கத்துறை மனு
அப்போது, ப. சிதம்பரத்தை மேலும் ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிதம்பரம் தரப்பிலோ, 14 நாட்கள் ஏற்கனவே விசாரித்துவிட்ட நிலையில் மீண்டும் எதற்கு காவலில் எடுத்து விசாரணை? என வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறைக்கு அனுமதி மறுப்பு
மேலும் ப. சிதம்பரத்தின் உடல்நிலை குறித்தும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், ப. சிதம்பரத்தை மேலும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.
நவ.13 வரை சிறை காவல்
ப.சிதம்பரத்தை நவம்பர் 13-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் சிதம்பரத்துக்கு வீட்டு உணவு, மருத்துவ வசதிகள் செய்து தரவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.