நாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நடத்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்
டெல்லி: பொருளாதார மந்தநிலையில் சிக்கி தவித்த நாட்டை 3.9 சதவீத வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய விவசாயிகளை மத்திய அரசு எதிரிகளைப் போல நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் மூன்று மாதங்களாக தொடர்ந்து மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பிய விவசாயிகளை எதிரிகளைப் போல நடத்தக் கூடாது என ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்,
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்த நாட்டை 3.9% வளர்ச்சியடைய வைத்த விவசாய துறையினருக்கு வெகுமதியாகப் போராடும் விவசாயிகளை எதிரிகளைப் போல மத்திய அரசு நடத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அசாம் முதல் கேரளா வரை பல இடங்களுக்குச் செல்கிறார். ஆனால், வெறும் 20 கிலோமீட்டர் பயணித்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளைப் பார்க்க அவருக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், அவர் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கியதாகக் கூறுவார்.
தேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ்; ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
நாட்டிலுள்ள 6% விவசாயிகளுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் நிலையே தற்போது உள்ளது. ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்றும் அவர் கூறுவார்" என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே உள்ளதாக வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.