நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்
Recommended Video
டெல்லி: தமிழகத்தின் சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முறையே நவம்பர் 9, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசுகையில் மகாராஷ்டிரம், ஹரியானாவில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை
அத்துடன் தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும். புதுவை காமராஜர்நகர் சட்டசபை தொகுதிக்கும் அக்.21-ஆம் தேதி நடைபெறுகிறது. இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தல் எப்போது?
இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் தேதி - அக்டோபர் 21
வாக்கு எண்ணிக்கை- அக்டோபர் 24
வேட்புமனு தாக்கல்- செப். 23
வேட்புமனு தாக்கல் முடிவு- செப். 30
வேட்புமனு பரிசீலனை- அக்டோபர் 1
வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள்- அக்டோபர் 3
என்றார் சுனில் அரோரா.
கன்னியாகுமரி தொகுதி
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தொகுதியான நாங்குநேரி சட்டசபை உறுப்பினராக காங்கிரஸின் வசந்தகுமார் தேர்வானார். இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
காலியான விக்கிரவாண்டி
இதையடுத்து அவர் நாங்குநேரி தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த ராதாமணி உடல்நல பாதிப்பால் காலமானார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.