தள்ளி போகிறது 20 தொகுதி இடைத்தேர்தல்?.. தலைமை தேர்தல் ஆணையர் திடீர் பேச்சால் பரபரப்பு
டெல்லி: கஜா புயலை காரணம் காட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் தற்போது தள்ளி போக வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. இவற்றில் இரு தொகுதிகளின் உறுப்பினர்கள் மரணமடைந்துவிட்டனர். மற்ற 18 தொகுதிகளின் உறுப்பினர்கள் கட்சி தலைமை கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஏற்கெனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பருவமழையை காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
ஆணையம் முடிவு செய்யும்
தற்போது கஜா புயல் கோரதாண்டவம் நிகழ்த்தியுள்ள நிலையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தந்தி டிவிக்கு தேர்தல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதினால் அதுகுறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
கடிதம் எழுதாவிட்டால்
அவ்வாறு தமிழக அரசு அறிக்கையோ கடிதமோ எழுதாவிட்டாலும் தேர்தல் ஆணையம் அதை கேட்கும். கஜா புயல் சீரமைப்பு பணிகள் முடிவடைய இன்னும் 4 மாதங்கள் ஆகும் என்றால் அதை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றார்.
சாத்தியக்கூறுகள் குறைவு
திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாலும் இன்னும் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாலும் மீண்டும் தேர்தலை தள்ளி வைக்க தமிழக அரசு கேட்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தலைமை தேர்தல் ஆணையரின் பேட்டியும் உள்ளது. எனவே 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் தற்போது நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றே தோன்றுகிறது.