அயோத்தி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மாற்றியமைப்பு! 29ம் தேதி விசாரணை
டெல்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வை புதிதாக உருவாக்கியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.
முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த 11ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அமர்வில் இருந்து யு.யு.லலித் விலகிக் கொண்டார். இவ்வழக்கில் ஏற்கனவே வழக்கறிஞராக பணியாற்றியதை குறிப்பிட்டு அவர் விலகிக் கொண்டார்.
இந்த நிலையில், நீதிபதி அப்துல் நசீர் மற்றும் நீதிபதி அசோக் பூஷன் ஆகியோரை இந்த அமர்வில் சேர்த்து புது அமர்வை உருவாக்கியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இந்த அமர்வில் உள்ள மற்ற இரு நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகும்.
அயோத்தி வழக்கு வரும் 29ம் தேதி முதல் விசாரிக்கப்பட உள்ளது. அப்போது வழக்கு விசாரணை தேதிகள் குறித்தெல்லாம் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.