"கருப்பு ஆடு" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்
டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை நீக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்துடன் மூன்று கடிதம் எழுதியுள்ள தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்றும் கடிதம் எழுதி உள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவக்கல்லூரி ஒன்றுக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா நீடித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற அட்வகேட் ஜெனரல் ராகவேந்திர சிங் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரை ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று நீதிபதிகள் குழு உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது கடந்த 2018ம் ஆண்டு விசாரணை நடத்தியது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
புகாரில் போதுமான ஆதாரம் இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய விசாரணைக்குழு பரிந்துரைத்தது. இதையேற்று நீதிபதி சுக்லாவை பதவி விலகுமாறோ அல்லது தானாக ஓய்வு பெறுமாரோ அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார் ஆனால் சுக்லா பதவி விலக மறுத்துவிட்டார். எனினும் சுக்லாவுக்கு எந்த பொறுப்பும் வழங்காமல் அன்றை அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டிபி போஸ்லே விடுவித்தார்.
பிரதமர் மோடிக்கு கடிதம்
இந்த சூழலில் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் நீதிபதி சுக்லாவை பதவியில் இருந்து நீக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவருமாறு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நீதித்துறையின் உயர்பதவியில் இருக்கும் கருப்பு ஆடுகள் களைப்பட வேண்டும் என்பதால் பிரதமர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதி பொறுப்பு தரவில்லை
நீதிபதி சுக்லாவை பதவியில் இருந்து நீக்கும் அளவுக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதை விசாரணை குழு கண்டறிந்தது. இதனால் அவரை பதவியில் இருந்து நீக்கி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரைத்துதார். இதன்பிறகு நீதிபதி சுக்லாவை எந்த ஒரு உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்ற இதுவரை அனுமதிக்கவில்லை. இந்த சூழலில் அவரை நீக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுன்றமே நீக்கும்
இதன்படி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுக்லாவை நீக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தை கூட்டி கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும். இது அதிகப்படியான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால், நீதிபதி சுக்லா பதவியில் இருந்து நீக்கப்படுவார்.