பாதிக்கப்பட்ட பெண்ணை மணமுடிக்குமாறு பாலியல் குற்றவாளியிடம் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
டெல்லி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் அந்தப் பெண்ணை திருமணம் செய்யுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கேட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தற்போது தனக்கு திருமணம் ஆகிவிட்டதால், அந்தப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று குற்றம்சாட்டப்பட்ட நபர் பதில் அளித்திருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டில் நடந்திருக்கும் கட்டாய பஞ்சாயத்து நாட்டையே அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநராக இருப்பவர் மோகித் சுபாஷ் சவான். இவர் சில வருடங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மோகித் சுபாஷ் சவான், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை பாதிப்புக்கு உள்ளான மாணவிக்கு தற்போது 18 வயதாகிறது.இந்நிலையில் மோகித் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இதனை விசாரித்தது.
திருமணம் செய்கிறீர்களா
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே, குற்றம் சாட்டப்பட்டவரிடம், 'நீங்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய அந்தப் பெண்ணை திருமணம் செய்யத் தயாரா?' என்று கேட்டார். அதற்கு அந்த நபர், 'நான் முன்னதாகவே அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டேன். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. தற்போது எனக்குத் திருமணம் ஆகிவிட்டதால், அந்தப் பெண்ணை திருமணம் செய்ய முடியாது' என்று பதில் அளித்திருக்கிறார்.
சிறை செல்ல நேரிடும்
மேலும் நீதிபதி அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் உதவி செய்ய முடியும். இல்லையெனில் உங்கள் அரசு வேலையை இழந்து, அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததற்காக சிறை செல்ல நேரிடும் என்று கூறினார்.
நாட்டுக்கே அவமானம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் அந்தப் பெண்ணை திருமணம் செய்யுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கேட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 'கட்டப் பஞ்சாயத்துகளை கிராமங்களே கைவிட்டு வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நடந்திருக்கும் கட்ட பஞ்சாயத்து நாட்டையே அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.