கண்டிப்பாக ‘இதை’ நீங்க செய்வீங்கனு நம்புகிறேன்! பிரதமர் முன்னிலையிலேயே ஓபனாக பேசிய முதல்வர் ஸ்டாலின்
டெல்லி : ஜி 20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது எனவும், இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு விழாவில் ஜி 20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜி 20அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த 1ஆம் தேதி ஏற்றது. இந்நிலையில், ஜி 20 மாநாடு டெல்லியில் 2023 செப்டம்பரில் நடக்க உள்ளது.
உயர்சாதியினர் ஏழைகளா? எப்படிங்க? 10% இடஒதுக்கீடு மிகப்பெரிய தவறு.. உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
ஜி 20
இதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் ஜி 20 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அந்த வகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஜி 20 கூட்டத்தை சிறப்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின்
மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி 20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்தும் அதனை சிறந்த முறையில் நடத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜி 20 கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என உறுதி அளிப்பதாக கூறியுள்ளார்.
இந்தியா கவனிக்கப்படுகிறது
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்," 2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
முழு ஆதரவு
'அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி' ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பசுமை காலநிலை நிறுவனம்
இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம். உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.