குட் நியூஸ்... இந்தியாவில் குழந்தை திருமணம் 51 சதவீதம் குறைந்தது.. மகிழ்ச்சி!
டெல்லி: இந்தியாவில் குழந்தை திருமண எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் சிறார் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. குடும்ப சூழ்நிலை, பொருளாத நிலை, கல்வியில் முன்னேறாத பகுதிகளில் சிறார் திருமணங்கள் அதிக அளவில் நடக்கின்றன. எனினும், கல்வி அறிவு மேம்பட்டு வருவதால், குழந்தை திருமணங்கள் இந்தியாவில் குறைந்து வருகின்றன.
பல இடங்களில் கங்கை நீரை குடிக்க, குளிக்க பயன்படுத்த முடியாது.. வௌியான அதிர்ச்சி தகவல்
விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் சிறார் திருமணம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த ஆய்வு முடிவுகளை இங்கிலாந்தை சேர்ந்த 'சேவ் தி சில்ரன்' என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.
குழந்தை திருமணம்...
அதில், குழந்தை திருமண தடுப்பு மற்றும் குழந்தை உடல்நல மேம்பாட்டில் இந்தியா சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவில் 15 முதல் 19 வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 51 சதவீதம் குறைந்துள்ளது. தவிரவும், குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்பட்டு இருப்பதை காட்டுகின்றது.
சந்தோஷம்...
டீன் ஏஜ் வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 1990ம் ஆண்டிலிருந்து 75 சதவீதமும், 2000ம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது 63 சதவீதமும் குறைந்துள்ளன. டீன் ஏஜ் வயதில் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை 35 லட்சத்திலிருந்து இப்போது 14 லட்சமாக குறைந்துள்ளது.
சிறப்பான பங்களிப்பு
உலக அளவில் குழந்தை திருமணங்கள் எண்ணிக்கை குறைந்ததில், இந்தியா நான்கில் மூன்று அளவுக்கு பங்களிப்பை வழங்கி இருக்கிறது. எனினும், இந்தியாவில் குழந்தை திருமணங்கள் முழுமையாக குறைந்தபாடில்லை.
கிராமங்களில் அதிகம்
குறிப்பாக, நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில்தான் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன. இந்தியாவில் 15 முதல் 19 வயதில் திருமணம் செய்யும் இளம் பெண்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 6.9 சதவீதமும், கிராமப்புறங்களில் 14.1 சதவீத அளவுக்கும் உள்ளன.
சிறப்பு கவனம் அவசியம்
ஏழ்மையான குடும்ப சூழல், எளிதாக பாதிக்கப்படக்கூடிய சமூகத்தில் உள்ள குழந்தைகள் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும். சிறப்பு திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாக அவர்களது முன்னேற்றத்தை உறுதி செய்வது அவசியம். குழந்தை திருமண தடுப்பில் பின்தங்கி இருக்கும் மாநிலங்கள் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.