மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
டெல்லி: ஹேண்ட் சானிடைசர்களை (hand sanitizers) பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்படுவது, அதிகரித்து உள்ளதாக, இந்திய மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரான்சில் மட்டும் கொரோனா பரவல் தொடங்கிய ஐந்து மாத காலப்பகுதியில் குழந்தை கண் காயங்களுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கேஸ்கள் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஜமா கண் மருத்துவம் இதழில் வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வு முடிவுகள், குழந்தைகளுக்கு உருவாகியுள்ள இந்த புதிய ஆபத்து குறித்து விரிவாகக் கூறியுள்ளன.
பிரான்சில், ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில், ஆண்டுக்கு ஏழு மடங்கு சானிட்டைசர் தொடர்பான கண் காயங்களை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பிரான்சின் விஷக் கட்டுப்பாட்டு மையத்தில் 232 கேஸ்கள் வரை கண் காயம் தொடர்பாக பதிவாகியுள்ளன.
விளையாட்டு அரங்கம், தியேட்டர்கள் மற்றும் ஷாப்பிங் மால் உள்ளிட்ட பொது இடங்களில் கணிசமான எண்ணிக்கையிலான கண் காயங்கள் ஏற்பட்டதாக பிரெஞ்சு ஆய்வு கண்டறிந்துள்ளது.
இங்கெல்லாம், நுழைவு மற்றும் வெளியேறும் போது கை சுத்திகரிப்பு சானிடைசர்கள் கட்டாயமாக்கப்பட்டிருந்தன. இதை தடவிய குழந்தைகள் தெரியாமல் அதை வைத்து கண்களை தொட்டுவிட்டனர். அல்லது சானிட்டைசரை போட அழுத்தும்போது அது நேரடியாக குழந்தைகள் கண்களில் பாய்ந்து விடுகிறது.
ஏனெனில் பொதுவாக சானிட்டைசர்கள் குழந்தைகளின் கண்கள் உயரத்தில்தான் வைக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு அது இடுப்பு உயரத்திற்கு இருப்பதால் பிரச்சினை இல்லை. எனவே சானிட்டைசர்களை பயன்படுத்தும்போது பெரியவர்கள் வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் அல்லது சோப்பு போட்டு கை கழுவுவது சரியான நடைமுறையாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.