குழந்தைங்க ஏற்கனவே கஷ்டப்படுறாங்க.. 'ஒரே நாடு, ஒரே கல்வி திட்டம்' மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: மாணவர்களுக்கு 'ஒரே நாடு ஒரே கல்விதிட்டம்' கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. குழந்தைகளை அதிக புத்தகங்களை சுமக்க வைக்க விரும்பவில்லை என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு ஒரே கல்வித் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞரும், டெல்லி மாநில பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாயா பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில் " இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21ஏ-கீழ் நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக, கட்டாயமாக ஒரே மாதிரியான கல்வியை அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
இனி தமிழகத்தில் மாவட்டங்களை பிரிக்கும் எண்ணம் இல்லை.. முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!
பொதுவான கல்வி
ஆனால் இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை. எனவே, நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு பொதுவான கல்வித் திட்டத்தைத கொண்டுவர வேண்டும். எனவே சி.பி.எஸ்.இ மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் கல்வி வாரியம் ஆகியவை இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும்..
மொழிகள் மாறலாம்
அரசு பள்ளியாக இருந்தாலும் சரி, தனியார் மற்றும் உள்ளூா் நிர்வாகங்கள் நடத்தும் பள்ளிகளாக இருந்தாலும் சரி, எந்த தொடக்க பள்ளிகளாக இருந்தாலும் அங்கு மாணவா்களுக்கு ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாநிலத்துக்கு ஏற்ப மொழிப் பாடங்கள், பாடங்கள் நடத்தப்படும் மொழிகள் மாறலாம். ஆனால், பாடத் திட்டம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும்.
மாணவர்கள் சிரமம்
இப்போது ஒவ்வொரு கல்வி வாரியமும், மாநிலங்களும் வெவ்வேறு மாதிரியான பாடத் திட்டத்தை வைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் சி.பி.எஸ்.இ கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தோ்வுகள் நடத்தப்படுகிறது. எனவே மாநில பாடத் திட்டத்தில் படிக்காத பிற மாணவா்கள் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இது வேலை இல்லை
இந்த பொதுநல மனுவை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்றம், கல்வி முறை என்பது அரசின் கொள்கை சார்ந்த விசயங்கள், எனவே இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இரு கல்வி வாரியங்களை இணைக்க வேண்டும் என்று நீங்கள் நீதிமன்றத்திடம் எப்படி கோர முடியும் ? இது நீதிமன்றத்தின் பணி இல்லை.
மனு தள்ளுபடி
ஏற்கனவே நமது பள்ளி மாணவர்கள் அதிகபடியான புத்தக சுமையை தோளில் சுமக்கின்றனர், அப்படி இருக்கையில் ஏன் கூடுதலாக புத்தக சுமையை அவர்கள் தோளில் வைக்க வேண்டும் என்று நீங்கள் (வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா ) நினைக்கிறீர்கள்.. வேண்டுமெனில் இது தொடர்பாக அரசிடமும், உரிய அமைப்பிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.