ஆஹா ஆசிரியர்கள்.. அடடா தேவதைகள்.. மறக்க முடியாத குழந்தைகள் தினம்!
டெல்லி: குழந்தைகள் தினத்தை யாரால்தான் மறக்க முடியும். குழந்தைகள் தினம் என்றதும் நேரு தலைப்பில் கட்டுரை எழுதி பரிசு வாங்கியது நினைவுக்கு வரலாம்.
நேரு என்ற தலைப்பில் ஒரு பக்கம் படித்து எப்படியோ மனப்பாடம் பண்ணி பேசி கூட்டத்தில் கை தட்டு வாங்கியது நினைவுக்கு வரலாம். இந்த போட்டி பரிசு அதை எல்லாம் விட அழகான ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
எங்கள் பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து எங்க எல்லோருக்குமான அழகான ஒரு பரிசு தருவார்கள். அது என்ன என்றால்...
எல்லாமே ஆசிரியர்கள் தான்
அந்தக் குழந்தைகள் தின விழா அன்று முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஒரு மாணவர்களை கூட காண முடியாது. அன்று எல்லாமே ஆசிரியர்கள் தான். விழா முன்னுரை, வரவேற்பு என்று வரிசையாக எல்லாமே ஆசிரியர்கள் தான். நாம ஜாலியாக ரசித்து கை தட்டுறது தான் நம்ம பங்கு.
ஆஹா ஆசிரியர்கள்
எப்போதும் வகுப்பறையில் கர்ஜிக்கும் ஆசிரியர்களின் "சங்கீதத்தை"க் கூட அன்று மைக்கில் இனிமையாக கேட்க முடியும். ஆசிரியர்கள் பாடல் மட்டுமா பாடுவார்கள். அழகு அழகாக குழு நடனம் கூட ஆடுவார்கள். அதுவும் எங்க கால கட்டத்தில் உள்ள இனிமையான பாடல்களுக்கு. நம் தேவதைகள் ஆடுவதை ஆச்சரியத்தோடு கண்கள் விரித்து பார்த்திருப்போம்.
ஆட்டம், பாட்டம்
பாடல், ஆடல் என்று முடித்து விடாமல் ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து நடிக்கும் நாடகங்கள் கூட உண்டு. அதைக் காணும் போது தான் எத்தனை இனிமை. ஏ அது எங்க டீச்சர் எங்க டீச்சர் என்று உற்சாகமாக சத்தம் எழுப்பி, ஆண் வேடமணிந்து இருக்கும் டீச்சரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்து என எவ்வளவு சுகமான அனுபவங்கள்.
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
இன்றைய குழந்தை தினத்தில் குழந்தையாய் இல்லாத பொழுது கூட அந்த கால பொழுதுகளின் சுவையை அசைபோட்டு சிலாகிப்பது சுகமே. பள்ளிச் சீருடை அணிந்து இரட்டை சடை கட்டி புளிப்பு நெல்லிக்காயை காக்கை கடி கடித்து நண்பன் தோளோடு கைபோட்டு கதைகள் பேசி நடந்து போன நினைவுகளோடு எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.