இது 4-வது முறை.. மசூத் அசாரை எப்போதெல்லாம் சீனா காப்பாற்றியுள்ளது தெரியுமா?
Recommended Video
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் வாயிலாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர், மவுலானா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா 4வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
இந்த நிலையில்தான், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் நாடு கொண்டு வந்து இருந்தது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 10 நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன.
மீண்டும் சீனா அநியாயம்.. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஆதரவு இல்லை.. இந்தியா ஏமாற்றம்
இந்த தீர்மானத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தபோதிலும், சீனா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்தியாவின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
2009ம் ஆண்டு, ஐநா சபையில், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தது. அதற்கு சீனா ஆதரவு கிடைக்கவில்லை. 2016ல் பதன்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, மீண்டும் ஐநா சபை உதவியை நாடியது இந்தியா. இம்முறை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய பி3 நாடுகள் உதவியுடன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போதும் சீனா முதுகில் குத்தியது.
2017ம் ஆண்டு பி3 நாடுகள், இதேபோன்ற தீர்மானத்தை முன்மொழிந்தன. அப்போதும், வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா, அதை பயன்படுத்தி இந்திய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இதே இப்போது காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் அரசு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்த தீர்மானத்திற்கும் சீனா ஆதரவு அளிக்கவில்லை. ஆக மொத்தம், 4 முறை தனது அதிகார பலத்தால் இந்தியாவின் முதுகில் குத்தி, தனது பாகிஸ்தான் தோழனுக்கு பல்வரிசை காட்டி சிரிக்கிறது சீனா.