ராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு
டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் அண்மைய அருணாச்சல பிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சீனா எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசியிருந்த ராஜ்நாத்சிங், எல்லைப் பகுதியில் வசிக்கும் இந்த மக்கள் கேந்திரமுக்கியத்துவங்களில் பிரதான பங்களிப்பு செலுத்தக் கூடியவர்கள். நாட்டின் பிறபகுதி மக்களைப் போல அல்லாமல் எல்லையில் வாழும் மக்கள் தேசத்தின் சொத்துகள் என்றார்.
மேலும் அருணாச்சலப் பிரதேசத்தை மேம்படுத்த வடகிழக்கு தொழில்வடப் பகுதியை பிரதமர் மோடி உருவாக்கி வருவதாகவும் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார். ராஜ்நாத்சிங்கின் இந்த பயணத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருவது பெரும் சர்ச்சையாக உள்ளது. இதனால் மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் அங்கு சென்றாலே ஆட்சேபம் தெரிவிப்பதை சீனா வாடிக்கையாக வைத்துள்ளது.
தற்போதும் அதே பாணியில், சீனாவின் நலன்களையும் வருத்தங்களையும் புரிந்து கொண்டு இந்தியா மதிப்பளிக்க வேண்டும்; எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இருதரப்பு உறவை பாதிக்கக் கூடாது என கூறியுள்ளது..