வாங்க பேசிக்கலாம்.. நமக்குள்ள சண்டை வேண்டாம்.. சீனத் தூதர் உருக்கமான வேண்டுகோள்
டெல்லி: எல்லை பிரச்சனையில் இந்தியா கடுமையாக அணுகுமுறையை கடைபிடித்து வருவதால் இறங்கி வந்துள்ள சீனா, நமக்குள்ள சண்டை வேண்டாம், வாங்க பேசிக்கலாம் என்று தூதரை வைத்து தூது அனுப்பி உள்ளது சீனா.
Recommended Video
சீன தூதர் சன் வீடோங், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வேண்டாம் என்றும் அமைதியே தேவை என்றும், பேச்சுவார்த்தை மூலம் அமைதியாக பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அண்மையில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சனை வெடித்தது. இரு தரப்பிலும் பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டது.
வங்கக் கடலில் கடற்படை பயிற்சி.. அமெரிக்கா, ஜப்பானோடு ஆஸி.யை அழைக்கும் இந்தியா! கோபத்தில் சீனா?
சீனா உடன் பேச்சுவார்த்தை
சீனாவிற்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. சீனாவின் ஆப்களுக்கு தடை, சீன பொருட்களை புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் பதற்றத்தை தணிப்பதற்காக இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளன. வெளியுறவுத்துறை மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை தொடரும் என்றும் சீன அரசும் இந்திய அரசும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.
பங்காளிகளாக இருப்போம்
இந்நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் "சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும். இருநாடுகளும் அச்சுறுத்தல்களை முன்வைப்பதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஒருவருக்கொருவர் நேர்மறையான, திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன் பார்ப்பதன் மூலம் மட்டுமே, நிலையான மற்றும் நீண்டகால உறவுகளை உறுதிசெய்ய முடியும். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திகளில் உள்ள தவறான கணக்கீட்டைத் தவிர்க்க முடியும்.
மோதுவதால் பயனில்லை
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மோதலை விட அமைதி தேவை. ஒத்துழைப்பு பலனளிக்கும் அதே வேளையில் மோதல் எந்த வகையிலும் பயனளிக்காது. வேறுபாடுகளிலிருந்து சர்ச்சைகள் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும். வேறுபாடுகளை சரியாகக் கையாளும் திறனமும், மோதலின் வலையில் சிக்காமல் இருப்பதற்கான ஞானமும் திறனும் எங்களிடம் உள்ளது..
திறந்த மனது வேண்டும்
யாருக்கும் பயனில்லாத மோதல் விளையாட்டை விடுத்து இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். திறந்த மனப்பான்மையும் ஒத்துழைப்பும் கொரோனாவை வீழ்த்தி பொருளாதாரத்தை விரைவில் புதுப்பிக்க உதவும். இரு நாடுகளும் சந்தேகத்தை வளர்ப்பதற்கு பதிலாக நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பரஸ்பர மரியாதையும், ஆதரவுமே சிறந்த வழி.
விரைவில் தீர்வு
இந்தியா, சீனா உறவு முற்போக்கு பாதையில் பயணிக்க வேண்டுமே தவிர பிற்போக்கு பாதையில் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவு தொடங்கி இந்தாண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த முன்னேற்றத்தை நாம் கொண்டாட வேண்டும். இந்த கடினமான சூழலை தீர்க்க தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு விரைவில் தீர்வு காண வேண்டும்" என்றார்.
கால்வான் பள்ளத்தாக்கு
கால்வான் பள்ளத்தாக்கில் படையினருக்கு இடையிலான வன்முறை மோதல் குறித்து விடோங் கூறும் போது, ஜூன் 15 அன்று சீனா-இந்தியா எல்லையின் மேற்கு பிராந்தியத்தில் கால்வன் பள்ளத்தாக்கில் வன்முறை மோதல் ஏற்பட்டது, இது சீனா அல்லது இந்தியா விரும்பாத ஒரு நிகழ்வு, கமாண்டர் நிலையிலான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சீன படைகள் பின்வாங்கிவிட்டன என்று கூறினார்.