குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் சீனா - செப்டம்பர் ஒப்பந்தம் மீறல்
டெல்லி: கிழக்கு லடாக்கில் பதட்டங்களைத் தணிக்கும் விதமாக அளித்த வாக்குறுதிகளை தற்போது சீன ராணுவம் மீறியுள்ளது.
சீன ராணுவம் உறுதிமொழியை மீறி, கிழக்கு லடாக்கில் தனது நிலைகளை பலப்படுத்தியது மட்டுமல்லாமல், சப்தமே இல்லாமல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் குவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாமல், திருட்டுத்தனமாக அதை சீனா மீற முயன்றிருக்கிறது என்பதையும் அதன் சமீபத்திய செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு தரப்பினரும் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அதில், இரு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை ஆர்வத்துடன் செயல்படுத்தவும், எல்லையில் தரைவழித் தகவல்தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்களையும் தவறான கருத்துக்களையும் தவிர்க்கவும், எல்லைக்கு அதிக வீரர்களை அனுப்புவதை நிறுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தான், கிழக்கு லடாக்கில் தனது ராணுவ துருப்புகளை சீன ராணுவம் அதிக அளவில் குவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்கு விளையாடியதே பெருமை.. கிரிக்கெட் வீரர் நடராஜன்
இந்தியா-சீனா எல்லையில் மற்ற இடங்களில், சிக்கிமின் Naku La எல்லையைத் தாண்டி நிரந்தர பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தான் PLA குழுக்கள் (சீனாவின் People's Liberation Army) உயர் மட்ட அளவிலான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
ஒருபுறம் சீனா எல்லையில் ராணுவத்தினரை குவிக்க, மறுபுறம் இந்தியாவும் சீனாவும் ஒன்பதாவது சுற்று ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றன. சுசுல் முகாம் அருகே மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.