இந்திய எல்லைக்குள் ஒரு கிராமத்தையே உருவாக்கிய சீனா.. புட்டுப் புட்டு வைத்த சாட்டிலைட்!
டெல்லி : இந்திய எல்லைக்குள் சீனா ஒரு புதிய கிராமத்தையே உருவாக்கியிருப்பது சாட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் கிட்டத்தட்ட 101 வீடுகளுக்கும் மேல் உள்ளடக்கிய ஒரு கிராமத்தை சீனா உருவாக்கி இருப்பது சாட்டிலைட் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை என்டிடிவி செய்தி நிறுவனம் எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கி.மீ தூரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிராமம் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
சுபன்சிரி மாவட்டம்
சுபன்சிரி மாவட்டத்தின் Tsari Chu நதிக் கரையில் இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி, இந்தியா மற்றும் சீனா இடையே நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய இடமாக உள்ளது. தவிர இரு தரப்பிலும் இங்கு மோதலும் நடைபெற்றிருக்கிறது.
லடாக்கில் மேற்குப் பகுதியில் இருந்து ஆயிரம் கி.மீ தொலைவில் அமைந்துள்ள இமயமலையில் கிழக்கு எல்லையில் இந்த கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. இருநாட்டு வீரர்களிடையே மிக மோசமான மோதல் கூட இந்த இடத்தில் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்.
தற்போது வெளியாகியிருக்கும் இந்த கிராமத்தின் இதே புகைப்படம் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்றும் வெளியானது.ஆனால், அப்போது இத்தனை கட்டிடங்கள் அங்கு காணப்படவில்லை. ஆனால், தற்போது 100க்கும் மேல் வீடுகள் தென்படுகின்றன. எனவே, இந்த கிராமம் கடந்த ஆண்டு தான் முழுமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில்
இந்த புகைப்படங்கள் குறித்த என்டிடிவியின் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்து சமீபத்திய அறிக்கைகள் வாயிலாக நாங்கள் அறிகிறோம். கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற உள்கட்டமைப்பு கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது.
சாலைகள், பாலங்கள் போன்றவற்றை அமைப்பது போன்ற எல்லை உள்கட்டமைப்பை உறுதி செய்யும் பணியை நமது அரசாங்கமும் முடுக்கிவிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
Cult Figure-ஆக உருவாகிறாரா டிரம்ப்? உருமாறுகிறதா அமெரிக்க அரசியல் கலாச்சாரம்?
உண்மையில், 2020 நவம்பரில், இந்த செயற்கைக்கோள் படம் எடுக்கப்பட்டபோது, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி., தபீர் காவ், தனது மாநிலத்தில் சீன ஊடுருவல்கள் குறித்து மக்களவையில் எச்சரித்திருந்தார். அதுவும், இந்த Upper Subansiri மாவட்டம் பற்றி குறிப்பிட்டு பேசி இருந்தார்.
இன்று காலை, அவர் அளித்த பேட்டியில், "சீனா Upper Subansiri மாவட்டத்திற்குள் 60-70 கி.மீ. தொலைவுக்கு உள்நுழைந்துவிட்டது. 'லென்சி' எனும் உள்ளூரில் பாயும் நதியின் குறுக்கே அவர்கள் ஒரு சாலையை அமைத்து வருகின்றனர்" என்று கூறியிருப்பது பகீர் ரகம்.
இந்திய எல்லைக்குள் சீனா கிராமம் உருவாக்கியுள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத வெளியுறவு அமைச்சகம், "இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்து கவனித்து வருகிறது, நாட்டின் இறையாண்மையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று பூசினாற் போல் பதிலளித்துள்ளது.
இந்தியா-சீனா இடையேயான உறவுகளை தீர்க்கமாக ஆய்வு செய்து வரும் நிபுணரான கிளாட் ஆர்பி கருத்துப்படி, '' இந்த கிராமம் மெக்மஹோன் [எல்லைக்கு] தெற்கே உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிராமம் அமைந்திருக்கும் பகுதி வரலாற்று ரீதியாக ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாகும். இது எல்லையில் வேறு பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.