டோக்லாமில் இனி சீனா வாலாட்ட முடியாது... 'புதிய பாதை' யால் மிரட்டிய இந்தியா!
டெல்லி: சர்ச்சைக்குரிய பூட்டானின் டோக்லாம் பகுதியை இந்திய ராணுவம் எந்த தடையும் இல்லாமல் சென்றடைய புதிய பாதை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பூட்டானின் டோக்லாம் பகுதியான இந்தியா-சீனா எல்லையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகும். இப்பகுதியை இந்திய ராணுவம் பாதுகாத்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் டோக்லாமை கைப்பற்ற சீனா பகீரத முயற்சிகளை மேற்கொண்டது.
இதனால் எல்லையில் இந்தியா- சீனா இடையே 72 நாட்கள் போர் பதற்றம் நீடித்தது. பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் சீனா தமது ராணுவத்தை திரும்பப் பெற்றது. அண்மையில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின்னர் நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் ராணுவத்தை மத்திய அரசு பலப்படுத்தி வருகிறது.
உறுதி அளித்த தலைவர்கள்.. ஜம்முவில் 2 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு
சீனாவை ஒட்டிய எல்லைகளில் நமது ராணுவத்தினர் எந்த தடையும் இல்லாமல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாகவே தற்போது சர்ச்சைக்குரிய டோக்லாம் பிராந்தியத்துக்கு புதிய பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா-சீனா எல்லையில் மொத்தம் 61 கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் 3,346 கி.மீ தொலைவுக்கு விரிந்துள்ளது. தற்போது வரை 3298 கி.மீ தொலைவு பாதைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் எஞ்சியிருக்கும் 11 கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதைகள் 58 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.