13 மணி நேர பேச்சுவார்த்தை... முதலில் படைகளை வாபஸ் பெறுங்கள்... சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு!!
டெல்லி: இந்தியா சீனா ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று 13 மணி நேரம் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் எல்லையில் இருந்து சீனா முற்றிலுமாக தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியா தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, மாஸ்கோவில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 5 அம்ச திட்டங்கள் இருதரப்பிலும் கையெழுத்தானது. இவற்றை இருதரப்பிலும் முறையாக கையாள்வது தொடர்பாக ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சீனாவுடன் 12 மணிநேரத்துக்கும் மேலாக இரவிலும் பேச்சுவார்த்தை! மத்திய அரசு அதிகாரியும் பங்கேற்பு
மோல்டா
இதையடுத்து, சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவுக்கு உள்பட்ட மோல்டா என்ற இடத்தில் நேற்று இந்திய சீனா ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 13மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா தரப்பில் 14வது படை தலைமை லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், லெப்டினன்ட் ஜெனரல் பிஜிகே மேனன், வெளிவிவகாரத்துறை இணை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டார்.
அடுத்த கட்டம்
இவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளிப்பார்கள். இதையடுத்து இருதரப்பிலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை துவங்கும் என்று கூறப்படுகிறது.
சுசூல்
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, எல்லையில் பாங்கோங் தி சோ, சுசூல், கோக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா அறிவிப்பு
முதலில் மே மாதத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் பல்வேறு இடங்களில் சீனப் படைகள்தான் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்ததால், அவர்கள்தான் முதலில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், இதைத் தொடர்ந்து இந்தியாவும் பின்பற்றும் என்று தெரிவித்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனா தனது படைகளை வாபஸ் பெறாவிட்டால், அந்த இடத்தில் இந்தியாவும் தனது படைகளை வாபஸ் பெறாது. நீண்ட நாட்களுக்கு தனது படைகளை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தல்
கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் போதிய சமரசம் எட்டப்படவில்லை. தொடர்ந்து சீனா எல்லையில் தனது படைகளை வலுப்படுத்தி வருகிறது. இது இந்தியாவுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எந்தவித பதற்றமும் தற்போது இல்லை.