லடாக்கில்... 38,000 சதுர கி. மீட்டர் சீனா ஆக்கிரமிப்பு... பகிரங்கமாக ஒப்புக் கொண்ட ராஜ்நாத் சிங்!!
டெல்லி: லடாக்கில் இந்தியாவுக்கு சொந்தமான 38,000 சதுர கி. மீட்டர் நிலத்தை சட்டத்திற்கு விரோதமாக சீனா ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 5,180 சதுர கி. மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்து சீனாவுக்கு கொடுத்துள்ளது என்று இன்று லோக் சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இன்று லோக் சபாவில் பேசிய ராஜ்நாத் சிங், '' சீனா இந்தியா இடையே எல்லைப் பிரச்சனை இன்னும் தீரவில்லை. பாரம்பரிய முறையில் எல்லைகளை வரையறுப்பதை சீனா ஏற்க மறுத்து வருகிறது. லடாக்கில் இந்தியாவுக்கு சொந்தமான 38,000 சதுர கி. மீட்டர் நிலத்தை சட்டத்திற்கு விரோதமாக சீனா ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. 1963ல் சீனா பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் கீழ், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 5,180 சதுர கி. மீட்டர் பரப்பளவை பாகிஸ்தான் ஆக்கிரமித்து சீனாவுக்கு கொடுத்துள்ளது.
நாட்டின் இறையாண்மையை, பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்திய பாதுகாப்புப் படை எந்த விலை கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறது. வலுக்கட்டாயமாக எல்லையில் ஆக்கிரமிப்பு செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று சீனாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது'' என்றார்.
இதுதொடர்பாக கேள்விகளை கேட்பதற்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொள்ளவில்லை இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் லோக் சபாவில் இருந்து வெளியேறினர்.
இந்திய - சீன எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த ஜூன் 15ஆம்தேதி கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி கொன்று இருந்தது. இது உலக அளவில் சீனாவின் கொடூரமான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. இதே தருணத்தில் சீனா தரப்பிலும் 60 வீரர்கள் கொல்லப்பட்டு இருந்ததாக செய்தி வெளியானது. ஆனால், இதை இதுவரை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை.
லடாக் எல்லை: சீனா ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்தோம்- எந்த நிலைமையையும் எதிர்கொள்வோம்: ராஜ்நாத்சிங்
இந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே மாஸ்கோவில் கடந்த வாரங்களில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 5 அம்சக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக இரண்டு தரப்பிலும் கையெழுத்தானது. அதில், முக்கியமாக இருதரப்பிலும் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது, பதட்டத்தை தணிப்பது. ஆனால், அதற்கான அறிகுறிகள் இல்லை என்றே செய்திகள் வெளியாகி இருந்தன. இதை உறுதி செய்யும் வகையில் இன்று லோக்சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பேசியுள்ளார்.