காஷ்மீர் விவகாரம்... சீனா, முஸ்லிம் நாடுகள் கனத்த மவுனம்... தன்னந்தனியே போராடும் பாக்.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடியாக சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்தது குறித்து சீனா மற்றும் முஸ்லிம் நாடுகள் கனத்த மவுனம் சாதிக்கின்றன. தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மட்டுமே தனித்து போராடி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டங்களில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்புவது வாடிக்கை. ஆனால் அண்மைக்காலமாக ஜம்மு காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்விவகாரம் என சர்வதேச நாடுகள் பலவும் ஒதுங்கியே நிற்கின்றன.
தற்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது பிரிவை நீக்கியதற்கும் கூட, இந்தியாவின் உள்விவகாரம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. லோக்சபாவில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் இந்தியாவின் ஒருங்கிணந்த பகுதி என அறிவித்தார்.
ஆனாலும் இதுவரை சீனா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. அதேபோல் முஸ்லிம் நாடுகளும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மட்டுமே எதிர்ப்பு கருத்துகளை கூறி வருகிறது.
இத்தனைக்கும் ஜம்மு காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டதை கூட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு விமர்சித்திருந்தது. ஆனால் தற்போது 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்த்உ எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.