பூட்டானில் ஊடுருவிய சீனா- டோக்லாம் அருகே 2 கி.மீ நிலப்பரப்பை ஆக்கிரமித்து கிராமத்தையே உருவாக்கியது!
டெல்லி: சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் பூட்டானின் 2 கி.மீ. நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஒரு புதிய கிராமத்தையே சீனா உருவாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டானின் எல்லைகளை இந்திய ராணுவம் கேந்திர முக்கியத்துவம் கருதி பாதுகாத்து வருகிறது. ஆனாலும் பூட்டானில் எல்லைப் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்க சீனா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது.
டோக்லாம் பதற்றம்
குறிப்பாக பூட்டானின் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்துவிட்டால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை தந்துவிட முடியும் என்பது சீனாவின் திட்டம். இதற்காக 2017-ல் டோக்லாம் பகுதிக்குள் சீனா ஊடுருவியது. ஆனால் இந்திய ராணுவத்தினர் மிக கடுமையாக எதிர்த்து நின்று சீன ராணுவத்தை பின்வாங்க செய்தனர்.
சீனாவின் ஆக்கிரமிப்பு
பூட்டான் எல்லையில் இருநாடுகளிடையே உச்சகட்ட போர்பதற்றத்தை அப்போது ஏற்படுத்தியிருந்தது. இருந்தபோதும் வாய்ப்பு கிடைக்கின்ற போது எல்லாம் பூட்டான் நிலத்தை அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதில் சீனா தீவிரமாக உள்ளது.
2 கிமீ நிலம் ஆக்கிரமிப்பு
இந்நிலையில்தான் டோக்லாம் பகுதியில் இருந்து 9 கி.மீ. தொலைவில் பூட்டானின் நிலப்பரப்பில் 2 கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. அத்துடன் அந்த ஆக்கிரமிப்பு இடத்தில் ஒரு புதிய கிராமத்தை பல்வேறு கட்டமைப்புகளுடனும் சீனா உருவாக்கி இருக்கிறது. இதனை சீனாவின் ஊடகவியலாளர் ஒருவர் முதலில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பின்னர் நீக்கிவிட்டார்.
பூட்டான் எல்லையில் பதற்றம்
ஆனால் தற்போது கூகுள் வரைபடங்கள் மூலமாக சீனா ஆக்கிரமித்து உருவாக்கியிருக்கும் புதிய கிராமம் அம்பலத்துக்கு வந்துள்ளது. லடாக் கிழக்கு எல்லையில் சீனாவுடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலர் மாண்டுபோயினர். இதனால் லடாக் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றம் தணியாத நிலையில் டோக்லாமில் மீண்டும் பதற்றத்துக்கு சுழி போட்டிருக்கிறது சீனா.