1962ல் செய்த அதே குள்ள நரித்தனம்.. இந்திய வீரர்கள் மனோதிடத்தை குலைக்க சீனா செய்யும் வேலையை பாருங்க
டெல்லி: சீன ராணுவ வியூக வகுப்பாளரான சன் சூ, 6ம் நூற்றாண்டில் எழுதிய தனது புகழ்பெற்ற புத்தகமான "ஆர்ட் ஆஃப் வார்"இல் ஒரு விஷயத்தை சொல்லியிருப்பார். போரின் மிகச்சிறந்த கலை எதிரிகளை சண்டையிடாமல் அடிபணிய வைப்பதாகும். இதைத்தான் அவர் அப்போதே உறுதிபட கூறியிருந்தார்.
மக்கள் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகங்கள், லடாக் மற்றும் பிற எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களிடம் அதே யுக்தியை இன்றும் பயன்படுத்துகின்றன.
இது புதிது இல்லை. 1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கையில் எடுத்த அதே தந்திரத்தை இப்போதும் சீனா செயல்படுத்தி வருகிறது.
சூர்யா வில்லன் டாங்லி தோற்றார் போங்க.. சீன வீரர்களிடம் அருணாச்சல் இளைஞர் அனுபவித்த சித்ரவதை இது!.
குளிர் காலம்
கிழக்கு லடாக் மற்றும் இந்தியா-சீனா உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே சீன ராணுவம் பெருமளவுக்கு குவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஊடுருவலை முறியடிப்பதற்காக இந்திய ராணுவமும் அதிக அளவுக்கு அங்கு குவிக்கப்பட்டுள்ளது. குளிர் காலம் நெருங்க உள்ள நிலையில் இந்த உயரமான எல்லைப்பகுதியில் தொடர்ந்து ராணுவம் பணியாற்றுவது என்பது சவாலான விஷயமாகும். அதேநேரம் இமயமலைப் பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இந்திய ராணுவம், குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தீரத்துடன் தயாராக இருக்கிறது.
சீன தந்திரம்
இந்திய ராணுவத்தின் உறுதியை பார்த்த சீன ராணுவம் தனது வழக்கமான தந்திரத்தை கையாள தொடங்கியுள்ளது. கத்தியின்றி ரத்தமின்றி துப்பாக்கிசூடு, ஏதுமின்றி எதிராளியின் மனவலிமையை குறைப்பதுதான் சீனாவின் குள்ளநரி தந்திரம். அதை இப்போதும் கையில் எடுத்துள்ளது சீனா.
பஞ்சாபி பாடல்கள்
பாங்கோங் த்சோ தெற்குக் கரை பகுதியில், பஞ்சாபி மொழியில், சத்தமாக பாடல்கள் இசைக்கப்படுகின்றன. இந்திய ராணுவத்தின் காதுகளில் விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படி செய்யப்படுகிறது. அதில் சில தலைவர்கள் அரசியல் லாபத்திற்காக ராணுவ வீரர்களை கடுமையான குளிர் பனி போன்றவற்றுக்கு இடையே நிறுத்தி உள்ளதாக அந்த ரேடியோவில் சத்தமாக பாடல் ஒளிபரப்பப்படுகிறது. மேலும், இந்திய ராணுவ வீரர்களுக்கு சுடச்சுட உணவு கிடைக்கவில்லை, போதிய தளவாடங்கள் இல்லை, இப்போதே இப்படி என்றால் குளிர்காலத்தில் நிலைமை எப்படி ஆகுமோ என்றெல்லாம் அந்த ஸ்பீக்கரில் பாடல் மற்றும் வசனம் மூலமாக பேசப்படுகிறது.
ஸ்பீக்கர் தந்திரம்
மத்திய அரசு மீது ராணுவத்தினருக்கு வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது. இதுபற்றி முன்னாள் ராணுவ அதிகாரிகள் சிலர் கூறுகையில் 1962 ஆம் ஆண்டு இந்தியா- சீனா மோதலின் போதும், இதே போன்ற ஸ்பீக்கர் தந்திரத்தை, சீனா பயன்படுத்தியது என்கிறார்கள்.
இந்திய ராணுவம்
அதேநேரம், சீனாவின் இந்த குள்ள நரித்தனத்தை இந்திய ராணுவ வீரர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் மனோ திடத்தை குறைக்கும் சீனாவின் எந்த ஒரு முயற்சிக்கும் அவர்கள் செவி கொடுப்பதில்லை. தாய் நாட்டின் எல்லையில் ஒருபிடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க கூடாது என்ற கொள்கை பிடிப்புடன் இந்திய ராணுவ வீரர்கள் கடும் குளிரில் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறது கள நிலவரம்.