செம திருப்பம்.. லடாக் எல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீன ராணுவம்.. பின்னணி என்ன?
டெல்லி: நாளை, சனிக்கிழமை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்திய எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சீன ராணுவம் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம், இந்திய எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே படைகளை குவித்து வைத்துள்ளது. சில இடங்களில் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு கிடைத்த தகவல் படி, சீன ராணுவம் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பிரபல ஆங்கில ஊடகம் 'இந்தியா டுடே' டிவி சேனல், இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து சில ஹிந்தி டிவி ஊடகங்களும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளன.
யாரிடம் எத்தனை போர் விமானங்கள்.. படை வீரர்கள் எண்ணிக்கை எப்படி? இந்தியா-சீனா ராணுவ பலம்- முழு விவரம்
அமெரிக்காவின் ஆதரவு
சீன ராணுவம் திடீரென பின்வாங்கியதற்கு இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகள் முக்கியமான காரணம் என்று சர்வதேச விவகார துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசியில் தொடர்புகொண்டு சீன விவகாரம் தொடர்பாக பேசியதும், இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறிய கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி ஆலோசனை
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, வியாழக்கிழமை நரேந்திர மோடி ஒரு ஆலோசனை நடத்தியிருந்தார். இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்கு, இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒருவருக்கொருவர் ராணுவ தளவாடங்களை பயன்படுத்திக்கொள்ள ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஆஸ்திரேலியாவுடன் நெருக்கம்
இரு நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்கான ராணுவ தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேவைப்படும்போது, எரிபொருளைப் பயன்படுத்தவும், இதனால், முடியும். இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக இருநாடுகளும் இணைந்து செய்த முக்கியமான முன்னெடுப்பு இதுவாகும். அமெரிக்காவின் நாய்.. என்று ஆஸ்திரேலியாவை சீனா மோசமாக விமர்சனம் செய்ததற்கு பதிலடியாக இந்தியாவுடன் மிக இறுக்கமாக கைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா என்று சொல்லமுடியும். இது இந்தியாவுக்கு பலமான முன்னெடுப்பு ஆகும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வியூகத்தை இந்தியா கையில் எடுத்ததற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
ஜப்பான், தைவான், வியட்நாம்
மற்றொரு பக்கம் சீனாவின் அண்டை நாடுகளான, ஜப்பான், தைவான், மற்றும் வியட்நாம் ஆகியவையும் இந்தியாவிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளன. லடாக் பகுதியில் இந்தியாவிடம் சீனா எப்படி வாலாட்டி வருகிறதோ அதே போல, இந்த நாடுகளிடமும் ஆதிக்கத்தை காட்டியுள்ளது. மற்றொரு பக்கம் இப்போது இந்தியா போன்ற, உலகின் மிகப்பெரிய, ராணுவ பலம் கொண்ட ஒரு நாட்டுடன் மோத, சீனா தயாராக இல்லை. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.
இந்திய சந்தை முக்கியம்
கொரோனா, வைரஸ் பாதிப்பு காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க வேண்டிய கட்டாயத்தில் சீனா இருக்கிறது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி சந்தையான அந்த நாடு, இப்போது போருக்காக, நேரத்தையும், நிதியையும் செலவிடும் நிலையில் இல்லை. மற்றொரு பக்கம், இந்தியாதான் சீனாவின் மிகப்பெரிய விற்பனை சந்தையாக இருக்கிறது. இந்தியாவை பகைத்துக் கொண்டு, பகைமை நாடு என்ற அந்தஸ்துக்கு சென்றால், சீன பொருட்களுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு வழி ஏற்பட்டுவிடும். இந்த பொருளாதார அடியை சீனாவால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை காரணமாக வைத்து, சீன படைகள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பின் வாங்கி விட்டதாக கூறுகிறார்கள் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுநர்கள். எனவே, நாளைய பேச்சுவார்த்தை, சக்சஸ்தான் ஆகும் என்கிறார்கள் அவர்கள்.