டிக் டாக் தெரியும்... முக்கிய விஷயங்களை சீனா திருடுவது தெரியுமா.. சசிதரூர் காட்டம்
Recommended Video
டெல்லி: டிக் டாக் செயலி மூலம் முக்கியமான தரவுகளை சீனா திருடி வருவதாக திருவனந்தபுரம் தொகுதி எம்.பி-யான சசிதரூர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து 'டிக்-டாக்' என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. வயது வித்தியாசம் இன்றி, பெரும்பாலான இந்தியர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலியை பயன்படுத்திய 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. ஆனால், சில நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டது.
தரவுகளை திருடும் சீனா
இந்தநிலையில், மக்களவையில் பேசிய சசிதரூர், டிக்டாக் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில் முக்கியத் தரவுகளை சீனா திருடி வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
டிக்டாக் செயலிக்கு அபராதம்
சமீபத்தில் அமெரிக்கக் குழந்தைகள் குறித்த தகவல்களைத் திருடியதற்காக டிக்டாக் நிறுவனத்திற்கு அந்நாடு 5 புள்ளி 7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். ஸ்மார்ட் போன்கள், மக்களைக் கவரும் செயலிகள் மூலம் முக்கியத் தகவல்கள் திருடப்பட்டு வருவதாகவும் சசிதரூர் குறிப்பிட்டார்.
கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்
சீனத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் திருடப்படும் இந்தத் தகவல்கள் நமது தேசத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கவலை தெரிவித்த அவர், ஜனநாயகத்தைக் காப்பதற்கான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
வங்கிக் கணக்கும் பாதிக்கப்படும்
இதற்கிடையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின், வங்கிக் கணக்கும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறதாம். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றும் படங்கள், அதன் பின்னணி இவற்றை கண்டறிந்து ஒரு கும்பல் உங்களை குறிவைத்து திருடிக் கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 110 கோடி ரூபாய் பணம் திருடு போய் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.