என்னாச்சு.. இந்தியாவிலுள்ள தங்கள் நாட்டு மக்களை திடீரென திரும்ப அழைக்கும் சீனா.. உச்சகட்ட பரபரப்பு
டெல்லி: இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுநோய்க்கு இடையே, இங்குள்ள தனது தனது குடிமக்களை அழைத்துச் செல்ல சீனா திட்டமிட்டுள்ளது. டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தூதரக இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் சிறப்பு விமானங்களில் சீனாவுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது குடிமக்கள், சீனா திரும்பத் திரும்ப மே 27 காலைக்குள், பதிவு செய்யுமாறு அந்த நாட்டு தூதரகம், இந்த உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா.. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்தி வைக்க முடிவு.. ஹு பரபரப்பு அறிவிப்பு!
அறிவிப்பு
"வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய துறைகளின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டின் கீழ், இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் இந்தியாவில் உள்ள மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவுகின்றன, திரும்பப் தாயகம் திரும்ப வேண்டிய அவசரத் தேவை உள்ளவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்," என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
புத்த மத துறவிகளும்
தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் கிடையாது. இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்ப வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து எப்போது புறப்படும் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
விதிமுறைகள்
அழைத்துச் செல்லப்படும் சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவிற்கு சென்றதும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகியுள்ளோர், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
இந்தியா அழைத்து வந்தது
அதுமட்டுமல்ல, கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீனா அனுப்பும் சிறப்பு விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஆனால் இப்போது, சீனா, நமது நாட்டிலிருந்து அவர்கள் குடிமக்களை அழைத்துச் செல்கிறது.
எல்லையில் பதற்றம்
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக, இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இந்திய ராணுவமும் கூடுதல் படைகளை குவித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் மோதல் அதிகரித்துள்ள நிலையில், தனது குடிமக்களை சீனா அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. பொதுவாக போர்க்காலங்களில்தான், எதிரி நாடுகளிலிருந்து தங்கள் மக்களை வெளியேற உத்தரவு பிறப்பிப்பது நாடுகளின் வழக்கம். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி சீனா இந்த நடவடிக்கையை எடுத்தாலும், எல்லையில், பதற்றம் அதிகரிக்குமோ என்ற சந்தேகங்களை இந்த நடவடிக்கை உருவாக்கியுள்ளது.