ஆயுதங்கள் சப்ளை-ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா?
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கும் வகையில் பயங்கரவாதிகளை சீனா தூண்டிவிட்டு வருவதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் சீனா தனது ஆக்கிரமிப்பு முயற்சிகளை விட்டுவிடவில்லை. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் அப்பகுதியில் ராணுவ குவிப்பை சீனா கைவிடவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் 25 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகளை அமைத்து வருகிறது சீனா. லடாக்கை தொடர்ந்து இமாச்சல் எல்லையில் சேட்டையை சீனா எந்த நேரத்திலும் காட்டலாம் என்பது நிலைமை.,
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் சீனாவுக்கு தொடர்பு? ஷாக் தகவல்
சீனாவுக்கு நோஸ்கர்
வடகிழக்கு மாநிலங்களில் அருணாசலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சீனா வாலாட்டி வந்தது. இதற்கு இந்திய தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது. ஆனாலும் சிக்கிமிலும் அருணாசலப் பிரதேசத்திலும் சீனா மூக்கை நுழைத்து உடைபட்டு போவது தொடர் கதையாக இருக்கிறது.
மியான்மர் எல்லையில் ஆயுத குவியல்
இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த வடகிழக்கிலும் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கும் குள்ளநரி வேலைகளில் சீனா குதித்திருக்கிறது என்கின்றன பாதுகாப்பு துறை வட்டாரங்கள். அண்மையில் மியான்மர்- தாய்லாந்து எல்லையில் மிகப் பெரிய அளவு சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் சீனா தயாரிப்புகள் ஆகும்.
வடகிழக்கு தீவிரவாதிகளுக்கு சப்ளை
இது தொடர்பாக European Foundation for South Asian Studies என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆயுதங்கள் வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோருகிற பிரிவினைவாதிகளுக்கு அனுப்பி வைக்க கொண்டுவரப்பட்டவை. மியான்மர் எல்லையில்தான் இந்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகளின் முகாம்கள் இருக்கின்றன. இவர்களுக்கே இந்த ஆயுதங்கள் கடத்தப்பட்டன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிரூட்டும் சீனா
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் இப்போது விரல்விட்டும் எண்ணும் வகையில்தான் இருக்கின்றன. அவையும் கூட தங்களது இருப்புக்காக அவ்வப்போது சிறுசிறு தாக்குதல்களை நடத்தக் கூடியவை. இந்த செத்துப் போன பிரிவினைவாத அமைப்புகளை உயிர்ப்பிக்கும் வேலையைத்தான் சீனா தொடங்கி வைத்திருக்கிறது.
திடீர் தாக்குதல்கள்
அண்மையில் மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனாவிடம் ஆயுத பயிற்சி பெற்ற வடகிழக்கு பயங்கரவாதிகள் குழுவே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. வடகிழக்கில் ஆயுதங்கள் சப்ளை, பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்கள் என சீனா பிரிவினைவாதத்தை உயிர்ப்பிப்பதையும் தேசம் தீரமுடன் எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.