அருணாச்சலில் எல்லை தாண்டிய எருதுகள்... உளவு கருவிகளை பொருத்தி வேவு பார்க்க அனுப்பி வைத்ததா சீனா?
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் எல்லை தாண்டிய 13 எருதுகளை சீனாவிடம் இந்தியா ஒப்படைத்திருக்கிறது. ஆனால் சீனாவின் எருதுகள் எல்லை தாண்டிய விவகாரம் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே மோதல் சூழ்நிலை நிலவுகிறது. இந்திய ராணுவத்தினரை தாக்க இரும்பு கம்பிகளுடன் சீனா ராணுவத்தினர் காத்திருந்த படங்கள் வெளியாகி சர்ச்சையாகி உள்ளன.
இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை நோக்கி ஆவேசமாக வந்த சீன ராணுவத்தினர்!
சீனாவின் எருதுகள்
இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் 13 சீனாவின் எருதுகள் எல்லை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தன. இந்த எருதுகளை நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைத்தனர் இந்திய ராணுவ வீரர்கள். ஆனால் இந்த எருதுகளை சீனா உளவு பார்க்கவே திட்டமிட்டு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
பெலுகா
கடந்த ஆண்டு ஆர்க்டிக் கடற்பரப்பில் பெலுகா வகை திமிங்கலம் ஒன்றை நார்வே அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் தலையில் உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. நார்வே நாட்டை உளவுபார்க ரஷ்யாதான் இந்த திமிங்கலத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ரஷ்யா இதை திட்டவட்டமாக மறுத்திருந்தது.
டால்பின்கள், கடல் சிங்கம்
அமெரிக்கா கடற்படை பல ஆண்டுகளாக டால்பின்களை உளவு பார்க்க அனுப்பி வைத்து வருகிறது. கடலுக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க டால்பின்களை பயன்படுத்துவது அமெரிக்காவின் யுக்தி. பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடிக்க கடல்சிங்கங்களை உளவு பார்க்கும் கருவிகளுடன் பயன்படுத்தியது அமெரிக்கா என்பது வரலாறு.
இஸ்ரேலும் பருந்துகளும்
இதேபோல் கால்நடைகள், விலங்குகளை வேவு பார்க்க அனுப்பி வைக்கும் நாடுகளில் இஸ்ரேல் மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டு உண்டு. 2007-ம் ஆண்டு ஈரானில் பிடிபட்ட அணில்களை இஸ்ரேல்தான் அனுப்பி வைத்ததாக பெரும் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பருந்துகளை இஸ்ரேல் அனுப்பி வேவுபார்த்ததாக சவுதி அரேபியா பல முறை குற்றம்சாட்டியிருக்கிறது. சூடானிலும் இதேபோன்ற வேவு பருந்துகள் சிக்கி இருக்கின்றன.
Recommended Video
எருதுகளில் உளவு கருவிகள்?
இந்த வரிசையில்தான் எருதுகளில் உளவு கருவிகளை பொருத்தி சீனா வேவு பார்க்க அனுப்பி வைத்ததா? என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அருணாச்சல பிரதேசத்தில் 5 இந்தியர்களை சீனா ராணுவம் கடத்தியிருகிறது. இந்த சூழ்நிலையிலும் எருதுகளை பாதுகாப்பாக சீனாவிடம் இந்தியா ஒப்படைத்திருக்கிறது. ஆனால் சீனா வேவுபார்க்கத்தான் எருதுகளை அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரிக்க முடியாது என்பது அரசியல் வல்ல்நுர்கள் கருத்து.