ஜனாதிபதி, பிரதமர், கருணாநிதி... ஆகியோரை வேவு பார்த்த சீன இணையதளம்... பகீர் தகவல்கள் அம்பலம்!!
டெல்லி: இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கும் 10,000 பேரின் தகவல்களை சீனாவின் ஜென்ஹூவா தகவல் தொழில்நுட்ப இணையதளம் திருடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட அரசியல்வாதிகளின் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. இத்துடன், அரசு நிறுவனங்கள், வர்த்தகம், மீடியா என வேவு பார்த்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சி
குறைத்து மதிப்பீடு செய்தல்
இந்த இணையதளத்தின் நோக்கமே, சைபர் தாக்குதல்கள் மேற்கொள்வது, தவறான பிரச்சாரங்கள் மற்றும் உளவு பார்ப்பதன் மூலம் முரண்பாடுகளை தூண்டுதல், நிதி நடவடிக்கைகளை சீர்குலைத்தல், நிறுவனங்களை குறைத்து மதிப்பீடு செய்வது, அரசியல் நிர்வாக, மற்றும் அறிவுசார்ந்தவர்களை இழிவுபடுத்துதல் இதன் நோக்கமாகும்.
முதல்வர்கள்
நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், முதல்வர்கள் மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், அமரிந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ் சிங் சவுகான், மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்ம்ருதி இராணி, பியூஸ் கோயல் என இந்தப் பட்டியல் நீள்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி
மேலும், பாதுகாப்புபடை தலைமை தளபதி பிபின் ராவத், குறைந்தது 15 முன்னாள் தலைமை தளபதிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் பாப்டே, இந்திய தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி ஜிசி முர்மு, தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, கவுதம் அதானி, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி என 10,000த்துக்கும் மேற்பட்டவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
போதைப் பொருள்
இது மட்டுமின்றி, மீடியா பிரபலங்கள், நடிகர்கள், அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள், மதம் சார்ந்த பிரபலங்களின் தகவல்கள், தன்னார்வலர்கள் என்று பலரின் தகவல்களை திரட்டியுள்ளது. மேலும், நிதி நிறுவனங்களில் மோசடி செய்தவர்கள், போதைப் பொருட்கள் கடத்தியவர்கள், தங்கம் கடத்தியவர்கள், ஆயுதங்கள் கடத்தியவர்கள், தீவிரவாதிகள், விலங்குகள் சரணாலயம் என்று அனைத்தையும் வேவு பார்த்து வந்திருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
ஷென்சென்
தகவல்களை திரட்டி இருக்கும் ஜென்ஹூவா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணையதளம் சீன நாட்டின் உளவுத்துறை, ராணுவம், பாதுகாப்பு ஏஜென்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இது ஷென்சென் என்ற இடத்தில் உள்ளது. இந்தியாவில் வர்த்தக நிறுவனங்கள், சுரங்கங்கள், தனிப்பட்ட நபர்களின் தொடர்புகள் என பல தகவல்களை திருடி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
வெளிநாடுகள்
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த நிறுவனம் தகவல்களை திருடியுள்ளது.
தீர்மானம்
இதையடுத்து, இன்று கூடிய நாடாளுமன்றத்தில் வேவு பார்த்த சீன நிறுவனம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால், எல்லையில் தற்போது பதற்றம் நிலவி வருகையில் இதுகுறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது சந்தேகமே.