லடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. கம்பளி, சாப்பாடு கொடுத்து கவனித்த இந்தியா!
டெல்லி: லடாக் எல்லைக்குள் அத்துமீறு ஊடுருவிய சீன ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளார்.
இந்தியா-சீனா இடையேயான எல்லையில், கடந்த பல மாதங்களாக இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில், சீனாவின் எல்லைமீறும் முயற்சியை முறியடிக்க முயன்றபோது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த பதற்றமான நிலை தொடரும் இக்காலகட்டத்தில், இந்திய எல்லைக்குள் சீன வீரர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்வான் மகனும், தேஜஸ்வி யாதவும் போட்ட செம ஸ்கெட்ச்.. ஜெர்க்கான நிதிஷ்குமார்.. பாஸாகுமா பாஜக கூட்டணி
விசாரணை நடந்தது
சீன ராணுவ வீரர் நமது பாதுகாப்பு படையினரால் பிடிபட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டது. பின்னர் இந்திய ராணுவமும் இதை உறுதி செய்தது. சும்மார்-டெம்சோக் என்ற பகுதியில் சீன ராணுவ வீரர் சிக்கியுள்ளாராம். அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தாரா, உளவு பார்க்க வந்தாரா என்பது பற்றி விசாரணை நடைபெற்றது.
திரும்ப ஒப்படைப்பு
"விசாரணையில் அவர் மீது தவறு இல்லை என்று தெரியவந்தால், ராணுவ நடைமுறையைப் பின்பற்றி அவர் சீனாவிடம் ஒப்படைக்கப்படுவார்" என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், நமது ராணுவத் தரப்பிலிருந்து மாலையில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
ராணுவ ஆவணங்கள்
இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சீன ராணுவ வீரரை காணவில்லை என்று சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தரப்பிலிருந்து முறைப்படி இந்திய ராணுவத்திற்கு தகவல் வந்தது. மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த (பி.எல்.ஏ) அந்த சிப்பாய், நமது ராணுவத்தால் பிடிக்கப்பட்டபோது சிவில் மற்றும் ராணுவ ஆவணங்கள் அவரிடம் இருந்தது.
உணவு கொடுத்து உபசரிப்பு
இங்குள்ள கடும் குளிர் நிலை காரணமாக, சீன வீரருக்கு ஆக்ஸிஜன், உணவு மற்றும் உடலை சூடுபடுத்தும் உடைகள் வழங்கப்பட்டன. தேவைப்படும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள நெறிமுறைகளின்படி, பார்மாலிட்டிஸ்களை முடித்த பின்னர் சுஷுல் மோல்டோ சந்திப்பு இடத்தில் சீன அதிகாரிகளிடம், இந்த ராணுவ வீரர் ஒப்படைக்கப்படுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.