பிஎம் கேர் நிதிக்கு சீன பணம்'.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பிய 8 கேள்விகள்!
டெல்லி: ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன நிதியை பெற்றுக்கொண்டதாக பாஜக கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ், சீன நிறுவனங்கள் பிஎம் கேர்ஸ்க்கு (அவசர கால நிதி) அளித்துள்ள நிதி குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சீனா மீது ஒரு "மென்மையான இடம்" இருப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ், சியோமி, ஒப்போ மற்றும் ஹவாய் உள்ளிட்ட பிரபல சீன நிறுவனங்களின் குழுவினர் நூற்றுக்கணக்கான கோடிகளை பி.எம் கேர்ஸில் அளித்துள்ளனர். இது "மிகவும் கவலை அளிக்கிறது" மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
2005 மற்றும் 2006ம் ஆண்டில் சீன மக்கள் குடியரசின் தூதரகத்திலிருந்து நிதி பெற்றதாக காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி அறக்கட்டளை குறித்து பாஜக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல்
சீனா அளித்த நிதி
அதில் "2020 மே 20 ஆம் தேதி நிலவரப்படி பிரதமர் மோடி பிஎம் கேர் நிதியாக 9,678 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சியூட்டும் தகவல்என்னவென்றால், சீனப் படைகள் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சமயத்தில் சீன நிறுவனங்களிலிருந்து பிஎம் கேருக்கு நிதி பெறப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பிரதமா் நன்கொடை பெற்றால், சீனாவின் அத்துமீறலில் இருந்து எப்படி நாட்டைப் பாதுகாப்பார்?
சீனா உடன் நட்பு
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பாஜக கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து தொடா்பில் இருக்கிறது. பாஜகவின் தேசியத் தலைவா்களாக ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா ஆகியோர் இருந்த காலங்களில், பாஜக-சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான பந்தத்தை வலுப்படுத்துவதற்காக, இந்தியாவில் இருந்து பாஜக குழுவினா் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
சீனாவுடன் தொடர்பு
இந்திய அரசியல் வரலாற்றில் வேறு எந்தக் கட்சியின் தலைவரும் சீனாவுடன் இந்த அளவுக்கு தொடா்பு வைத்துக் கொண்டது கிடையாது. மத்திய பாஜக அரசின் செயல்களைப் பார்த்தால் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவில்லை. தங்கள் நலனே முக்கியம் என்று அவா்கள் செயல்படுகிறார்கள்.
சீன நிறுவனங்கள்
சீன நிறுவனமான ஹுவாயிலிருந்து பிரதமர் ரூ .7 கோடியைப் பெற்றிருக்கிறாரா? சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துடன் HUAWEI க்கு நேரடி தொடர்பு இருக்கிறதா இல்லையா ? டிக் டோக்கை வைத்திருக்கும் சீன நிறுவனம் சர்ச்சைக்குரிய பி.எம் கேர்ஸ் நிதிக்கு ரூ .30 கோடி நன்கொடை அளிக்க உதவியுள்ளதா? 38% சீன உரிமையைக் கொண்ட பேடிஎம், பிஎம் கேர் நிதிக்கு 100 கோடியைக் கொடுத்துள்ளதா? சீன நிறுவனமான சியோமி, பிஎம் கேர் நிதிக்கு ரூ .15 கோடியை செலுத்தியுள்ளதா? சீன நிறுவனமான ஓப்போ இந்த பிஎம் கேர் நிதிக்கு ரூ .1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளதா?
ஒன்பிளஸ் ரூ .1 கோடி
அண்மையில் ஒரு அறிக்கையில், சியோமி பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ .10 கோடி மற்றும் மாநிலங்கள் முழுவதும் முதலமைச்சரின் நிவாரண நிதியை கொரோனா வைரஸுடன் போரிடுவதற்காக நிதி வழங்கியதாக கூறியுள்ளது. பிரதமரின் தேசிய நிவாரண நிதியம் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சரின் துயர நிவாரண நிதிக்கு மொத்தமாக ரூ .1 கோடி பங்களிப்பு செய்வதாக ஒப்போ கூறியுள்ளது. ஒன்பிளஸ் ரூ .1 கோடி பங்களிப்பு செய்ய பொது உறுதிப்பாட்டை செய்துள்ளது.
ரகசியமாக உள்ளது
பிரதமரின் தனிப்பட்டதாகத் தோன்றும் நிதியைப் போலவே பிஎம் கேர்ஸ் நிதி இயங்குகிறது. இது எந்தவொரு பொது அதிகாரத்தினாலும் அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தணிக்கைக்கு கூட உட்படுத்தப்படவில்லை. மொத்தத்தில், இந்த நிதி பூஜ்ஜிய வெளிப்படைத்தன்மை மற்றும் பூஜ்ஜிய பொறுப்புணர்வுடன் காற்றுக்கூட நுழைய முடியாத அளவிற்கு இரகசிய பாணியில் பிரதமரால் மட்டுமே நடத்தப்படுவதாக தோன்றுகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜக பதிலடி
இதனிடையே இந்த விவகாரத்தில் பாஜக இதுவரை எதுவும் பதிலும் அளிக்கவில்லை. எனினும் கோவிட் -19 க்கான பி.எம் கேர்ஸ் நிதி, சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரால் கட்டுப்படுத்தப்படும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை போன்ற ஒரு தனியார் அமைப்புக்கான நன்கொடைகளுக்கு சமமானதல்ல" என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.