இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா? சீரம் உட்பட இந்திய மருந்து நிறுவனங்களை... ஹேக் செய்ய முயன்ற சீனா
டெல்லி: சீன அரசுக்குப் பின் இருக்கும் ஹேக்கிங் குழு ஒன்று இந்தியாவில் இருக்கும் இரண்டு தடுப்பூசி நிறுவனங்களின் தொழில்நுட்ப அமைப்புகளை ஹேக் செய்ய முயன்று வருவதாக சைஃபிர்மா என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனமும், கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்து வருகிறது.
நட்பு ரீதியில் பல்வேறு அண்டை நாடுகளுக்கும் இந்தியா கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. அதேபோல பல நாடுகளுக்கு வணிக ரீதியிலும் தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்து வருகிறது.
ஹேக் செய்யும் சீனா
இந்நிலையில், சீரம் மற்றும் பாரத் பயோடெக் என இரண்டு தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தொழில்நுட்ப அமைப்புகளைச் சீன அரசுக்குப் பின் இருக்கும் ஹேக்கிங் குழு ஒன்று ஹேக் செய்ய முயல்வதாக சைஃபிர்மா என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா தடுப்பூசியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. அதைத் தடுக்கவே சீனா இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.
பல நாடுகள் தயக்கம்
இந்தியாவைப் போலவே சீனாவும் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சினோபார்ம் மற்றும் சினோவாக் என்று இரண்டு தடுப்பூசிகளைச் சீனா கண்டுபிடித்துள்ளது. ஆனால், இந்த இரண்டு தடுப்பூசிகளுமே பெரியளவில் கொரோனா பரவலை நிறுத்துவதில்லை. அதேபோல பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் எழுந்துள்ளது. இதனால் சீனா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பல நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன.
சர்வர்கள் பலவீனம்
இதனாலேயே இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஹேக் செய்யச் சீனா ஹேக்கர்கள் முயன்றுள்ளனர். குறிப்பாக, சீரம் நிறுவனத்தின் சர்வர்கள் மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் அதையே ஹேக் செய்யச் சீனா முயன்று வருவதாக சைஃபிர்மா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் சர்வர்கள் பலவீனமாக உள்ளதாகவும் சைஃபிர்மா தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டிற்குச் சீன வெளியுறவுத் துறை பதில் அளிக்க மறுத்துவிட்டது. அதேபோல சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
முன்னதாக, கடந்தாண்டு நவம்பர் மாதம் ரஷ்யா மற்றும் வடகொரிய நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர்கள் அமெரிக்கா மருந்து நிறுவனங்களை ஹேக் செய்ய முயல்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேபோல கனடா, பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகளையும் அவர்கள் ஹேக் செய்ய முயல்வதாக மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.
சைபர் பாதுகாப்பு
இதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள 12 அரசு நிறுவனங்களின் சர்வர்கள் பலவீனமாக உள்ளதாகவும் அதையும் சீனா ஹேக் செய்ய முயல்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. கடந்தாண்டு மும்பையில் ஏற்பட்ட மின்சார துண்டிப்பிற்குப் பின்னால் இருப்பதும் சீன ஹேக்கர்கள் என்றும் தகவல் பரவியது. எது எப்படியாக இருந்தாலும் இந்திய நிறுவனங்கள் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தங்கள் வழங்கிகளைப் பலப்படுத்தியே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது